சிங்கப்பூரர்கள் சென்ற சுற்றுலா வேன் மலேசியாவின் ஜோகூரில் விபத்திற்குள்ளானது.
நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட அவ்விபத்தில் வேனில் சென்ற 12 சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமுற்றதாகக் கூறப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) மாலை 5.15 மணிக்கு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
28 பயணிகளுடன் சென்ற விரைவுப்பேருந்து ஒன்று, சிங்கப்பூரர்கள் சென்ற சுற்றுலா வேனுடனும் மேலும் இரு கார்களுடனும் மோதியது.
அந்த விரைவுப்பேருந்து மலாக்காவில் இருந்து ஜோகூர் பாருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் கூறுகின்றன.
விரைவுச்சாலையின் இடது தடத்தில் சென்ற அப்பேருந்து, முன்னால் சென்ற வேன்மீது மோதியதாகக் கூறப்பட்டது. அதனால், அந்த வேன் தனக்கு முன்னால் சென்ற காருடனும் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற காருடனும் மோதியதாகச் சொல்லப்பட்டது.
விரைவுப்பேருந்தின் ஓட்டுநருக்கு இலேசான காயமேற்பட்டது. அதிலிருந்த பயணிகள் எவருக்கும் காயமில்லை.
அதேபோல, சிங்கப்பூரர்கள் சென்ற சுற்றுலா வேனின் ஓட்டுநருக்கும் காயமில்லை. அதே நேரத்தில், விபத்தில் சிக்கிய இரு கார்களில் ஒன்றின் ஓட்டுநர் காயமடைந்தார்.
காயமுற்ற அனைவரும் மூவாரில் உள்ள சுல்தானா ஃபாத்திமா சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுடனும் அவர்களின் குடும்பத்தாருடனும் தொடர்பில் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“காயமுற்றோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக ஜோகூரில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தில் இருந்து ஒரு குழுவினர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்,” என்று அமைச்சு கூறியது.