பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் தங்களது வாழ்க்கைத்தரம் கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முந்திய நிலையைப் போல அல்லது அதைவிட மேம்பட்ட நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்பு, தகவல் அமைச்சு நடத்திய கருத்தாய்வில் பங்கேற்றோரில் 72 விழுக்காட்டினர் அவ்வாறு கூறினர்.
இணையம் வழியாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டோரில் 10ல் 7 பேர், அரசாங்கத்தாலும் இங்குள்ள சுகாதாரப் பராமரிப்பு வசதிகளாலும் வருங்கால கொள்ளைநோயைச் சமாளிக்க முடியும் என்று நம்புகின்றனர். இன்னொரு கொள்ளைநோய் உருவெடுத்தால் சிங்கப்பூர் அதனை வெற்றிகரமாகக் கடந்துவிடும் என்று 75 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரம், அப்படி ஒரு நிலையை எப்படிக் கையாள்வது என்பதை அரசாங்கம் தெரிந்து வைத்திருப்பதாக 71 விழுக்காட்டினர் கூறினர்.
வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் கொவிட்-19 கொள்ளைநேய் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து அறிய, 15 வயதுக்கும் மேற்பாட்டோரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 1,052 பேர் கலந்துகொண்டனர். ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் தங்களது அண்டைவீட்டாருடனான உறவில் பலம் கூடியிருக்கிறது அல்லது முன்பிருந்த நிலைக்குத் திரும்பி இருக்கிறது என்று 82 விழுக்காட்டினர் கூறினர்.
குடும்பத்தில் உள்ளோருடனான உறவின் நிலையும் இதேபோல இருந்ததாக 77 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
கொள்ளைநோயைக் கடந்த பின்னர் தங்களது நிதித் தேவையை நல்லமுறையில் சமாளிப்பதாக அல்லது கொள்ளைநோய்க்கு முன்பு சமாளித்ததைப்போன்ற நிலை இருப்பதாக 72 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இப்படிப் பெரும்பாலானோர் சாதகமான பதிலைத் தந்திருக்கும் அதேநேரம் 28 விழுக்காட்டினர் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தினர். தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் கொள்ளைநோய்க்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மோசமாகிவிட்டதாக உணர்வதாக அவர்கள் கூறினர்.
அதேநேரம் தங்களது வாழ்க்கையில் 10 அம்சங்கள் மேம்பட்டிருப்பதாக அல்லது மாற்றமின்றி இருப்பதாக 10ல் 6 பேர் கருத்துக் கூறினர்.
குடும்பம் மற்றும் அண்டைவீட்டாருடனான உறவுநிலை, உடல் மற்றும் மனநிலையைப் பராமரிக்கும் திறன், சுகாதாரமான வேலை-வாழ்க்கைச் சமநிலையைப் பெற்றிருப்பது போன்றவை அந்த 10 அம்சங்களுள் அடங்கும். பொதுவான மீட்சியை இது குறிப்பதாக அமைச்சு கூறியது.
தங்களின் வாழ்க்கைத்தரம் கொள்ளைநோய்க்குப் பின்னர் குறைந்துவிட்டதாக 38 விழுக்காட்டு இளையர்கள் கூறினர். அவர்கள் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர். வாழ்க்கைத்தரம் சரிந்ததாக பொதுமக்களில் 28 விழுக்காட்டினர் இவ்வாறு கூறியிருந்த நிலையில் இளையர்களின் விகிதம் அதைவிட அதிகமாக இருந்ததை ஆய்வு காட்டியது.
அதேபோல தங்களது மனநிலையைப் பராமரிக்கும் திறன் குறைந்துவிட்டதாக பொதுமக்களில் 28 விழுக்காட்டினர் கூறிய நிலையில் இவ்வாறு கூறிய இளையரின் விகிதம் 37 விழுக்காடாக இருந்தது.
சமூக நடவடிக்கைகள் தொடர்பாக விதிக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளின் தாக்கம் இளையர்களிடம், குறிப்பாக பதின்மவயதினரிடம், அதிகம் தென்பட்டதையே இந்த நிலை உணர்த்துவதாக அமைச்சு தெரிவித்தது.
ஆய்வு கண்டறிந்தவை குறித்து தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது சமூக ஊடகப் பக்கத்தில் “கொள்ளைநோய் நமக்கு இருண்டகாலமாக இருந்தது. ஆயினும் அந்த மோசமான நிலைமையில் கருணை, பெருந்தன்மை, தாராள மனப்பான்மை போன்ற நற்குணங்கள் வெளிப்பட்டன,” என பதிவிட்டுள்ளார்.