தனது நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றும் 98 பேருக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்துள்ளது சிங்கப்பூரின் ‘பேரடைஸ் குழுமம்’.
அந்நிறுவனப் பணியாளர் ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியில், தங்களுக்கான அன்பளிப்பைப் பெற்றுக்கொள்ள அந்தக் கைக்கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ள மேசையை நோக்கி அவ்வூழியர்கள் செல்வது தெரிகிறது.
நிறுவனத்தின் இந்த தாராள மனப்பான்மை இணையவாசிகள் பலரையும் ஈர்த்துள்ளது. சிலர் அந்நிறுவனம் வேலைக்கு ஆளெடுக்கிறதா என்றும் கேட்டுள்ளனர்.
அந்த உணவு, பானக் குழுமம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது 14வது ஆண்டுநிறைவைக் கொண்டாடியது.
மரினா பே சேண்ட்சில் நடந்த அந்நிகழ்ச்சியில் அதன் ஊழியர்கள், பங்காளிகள் என 1,300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதற்கு 2 மில்லியன் வெள்ளி செலவானதாகக் கூறப்பட்டது.
பத்து ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு ரோலக்ஸ் கடிகாரம் வழங்கப்பட்டதாக பேரடைஸ் குழுமம் தெரிவித்தது.
அந்த 98 பேர் உட்பட ஐந்தாண்டுகளுக்குமேல் பணியாற்றிய 330 பேருக்கு நீண்டகால சேவை விருதுகள் வழங்கப்பட்டன என்றும் தங்கக்கட்டிகள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.