இன்று (14-02-2023) முதல் பிறக்கும் தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூர் குழந்தைகளுக்கும் குழந்தை போனசாக மேலும் $3,000 வழங்கப்படும்.
இதுவரை முதலாவது, இரண்டாவது பிள்ளைக்கு $8,000 குழந்தை போனஸ் வழங்கப்பட்டு வந்தது. அத்தொகை இனி $11,000ஆக உயர்த்தித் தரப்படும். மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் தொகை 10,000 வெள்ளியிலிருந்து 13,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
தகுதிபெறும் பெற்றோர்கள், தங்களது குழந்தையின் 18 மாதங்களில் $9,000 வரை வழங்குதொகையை எதிர்பார்க்கலாம். அதன்பின், குழந்தைக்கு இரண்டு வயது தொடங்கி, ஆறரை வயது முடியும்வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் $400 வழங்கப்படும்.
மேலும், அதிகமான குழந்தைகள் பயனடையும் வகையில் குழந்தை ஆதரவு மானியம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2023 பிப்ரவரி 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு $3,000 குழந்தை ஆதரவு மானியம் வழங்கப்படும்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தின்போது, 2020 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளுக்காக இந்த மானியம் அறிமுகம் செய்யப்பட்டது.

