எம்ஆர்டி சுரங்கப்பாதையில் தீ; இரண்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

எம்ஆர்டி சுரங்கப்பாதையில் தீ; இரண்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

2 mins read
3fc3372a-2957-4dfb-9702-0419ced6ad18
ரயில் சேவைக்குப் பிறகு, இரவு நேரத்தில் தடத்தைப் பராமரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கனமான சாதனத்தை இழுத்துச் செல்லும் உந்துபொறி ரயிலில் தீப்பற்றியது. படம்: எஸ்எம்ஆர்டி -

ஆர்ச்சர்ட், சாமர்செட் எம்ஆர்டி நிலையங்களுக்கிடையே உள்ள ரயில் சுரங்கப்பாதையில் இன்று (அக்டோபர் 16) அதிகாலை வேளையில் தீ மூண்டதையடுத்து, புகையை சுவாசித்ததற்காக இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை ஆகிய எம்ஆர்டி தடங்களில் பெரியளவில் சேவைத் தடை ஏற்பட்ட இரு நாட்களுக்குள் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

ரயில் சேவைக்குப் பிறகு, இரவு நேரத்தில் தடத்தைப் பராமரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கனமான சாதனத்தை இழுத்துச் செல்லும் உந்துபொறி ரயிலில் தீப்பற்றியது.

அந்தச் சுரங்கப் பாதை முழுவதும் புகைமண்டியதாகக் கூறப்பட்டது. "அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இங்குமங்கும் ஓடினர்," என்றும் தகவல் அளித்தவர் தெரிவித்தார்.

சாமர்செட் எம்ஆர்டி நிலையத்தில் தீ மூண்டதாக, சம்பவத்தின் தொடர்பில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் (SCDF) தகவல் கிடைத்தது.

"உந்துபொறி ரயிலின் எஞ்சின் இருந்த பகுதியில் தீப்பற்றியது," என்று SCDF பேச்சாளர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பாகவே நான்கு தீயணைப்பு சாதனங்களைக் கொண்டு எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் தீயை அணைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ரயில் சுரங்கப் பாதையில் தீ மூண்ட சம்பவம் இது முதல்முறையல்ல. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மரினா பே, ராபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கிடயே சுரங்கப் பாதையில் தீ மூண்டது. அதே நாளில் பீஷான் ரயில் சுரங்கப் பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015, 2013, 2004 ஆகிய ஆண்டுகளிலும் இது போன்ற தீச்சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்