மலேசிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா, ஆண்டிறுதிக்குள் அனைத்து சிங்கப்பூர் விமானச் சேவைகளையும் தொடர இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது, கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையைப்போல விமானச் சேவைகளை இயக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் வட்டாரத்தில் உள்ள இதர நகர்களுக்கும் இடையே வாரத்திற்கு 105 விமானச் சேவைகளை தற்போது ஏர்ஏஷியா இயக்கி வருகிறது. கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையின்போது, வாரத்திற்கு 273 விமானச் சேவைகளை அது இயக்கி வந்தது.
இங்குள்ள முதலீட்டாளர்களையும் உள்ளூர் ஊழியர்களையும் சந்திப்பதற்காக ஏர்ஏஷியாவின் இணை நிறுவனரான திரு டோனி ஃபெர்னாண்டெஸ் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது தமது நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார். கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.
“மலிவுக் கட்டண விமானச் சேவை துறை குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது. முழுச் சேவை வழங்கும் நிறுவனங்களும் சிறப்பாக செய்யும் என நினைக்கிறேன். எனினும், வர்த்தகப் பயணங்கள் வழக்கநிலையை எட்டுவதற்கு சற்று காலம் எடுக்கலாம்,” என்றார் அவர்.
விமானப் போக்குவரத்தும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாண்டு பிற்பாதியில் சாங்கி விமான நிலையம் நான்காம் முனையம் மீண்டும் திறக்கப்படலாம். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், நான்காம் முனையம் கடந்த ஈராண்டுகளாக மூடப்பட்டுள்ளது. ஏர்ஏஷியா அதன் விமானச் சேவைகளைப் பெரும்பாலும் அந்த முனையத்தில்தான் இயக்கி வந்தது.