புளோக் 166 ஹவ்காங் அவென்யூ 1ன் கீழ்த்தளத்தில் புதன்கிழமை (மார்ச் 29) காலை சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதன் தொடர்பில் 18 வயது மாது ஒருவர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
வழக்கத்திற்கு மாறான இந்த மரணம் குறித்து முற்பகல் 11.30 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
பிற்பகல் 1.20 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சம்பவ இடத்துக்குச் சென்று நிலவரத்தைப் பார்த்தது. அப்போது புளோக்கின் பக்கத்தில் உள்ள புல்வெளியில் நீல நிற கூடாரம் போடப்பட்டிருந்தது.
அந்தக் கூடாரம் நகர்த்தப்பட்டபோது, இளஞ்சிவப்பு நிற துண்டில் போர்த்தப்பட்டிருந்த சிசு அளவில் இருந்த சடலத்தைக் காவல்துறை ஆய்வாளர் சிறிதுநேரம் தூக்கி வைத்திருந்தைக் காண முடிந்தது.
புளோக்கின் இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே காவல்துறையினர் தடுப்புவேலிகளை அமைத்திருந்தனர். அந்த வீட்டிற்கு அருகிலுள்ள மின்தூக்கிக் கூடத்தில் ரத்தத்துளிகள் காணப்பட்டன.
‘அலறல் சத்தம் எதுவும் கேட்கவில்லை’
இந்நிலையில், அந்த பூளோக்கின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், காலைப் பொழுது அமைதியாக இருந்ததாகக் கூறினார்.
தம்மை ஜேம்ஸ், 26, என்று அடையாளப்படுத்திக்கொண்ட அந்த மென்பொருள் பொறியாளர், காலை 10 மணியளவில் தாம் கண்விழித்ததாகச் சொன்னார். பிற்பகல் 1 மணிக்கு ஏதோ நிகழ்வதை தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்.
“ஒரு சத்தமும் எனக்குக் கேட்கவில்லை. என் வீட்டு சன்னலுக்குக் கீழே காவல்துறைக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன்,” என்றார் திரு ஜேம்ஸ்.
புளோக்கின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் திரு நோர்சுஃபி நோர்டின், 30, நண்பகல் 12 மணியளவில் காவல்துறையினர் தம் வீட்டுக் கதவைத் தட்டியதாகக் கூறினார்.
“யாராவது அலறும் சத்தம் கேட்டதா எனக் காவல்துறையினர் என்னிடம் கேட்டனர். எதுவும் கேட்கவில்லை என்று நான் சொன்னேன்,” என்றார் அவர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.