கொவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு முன்னோக்கிச் செல்வதில் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இதனைப் பதிவிட்ட திரு வோங், 'புதிய காலகட்டத்தில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்' என்ற கருப்பொருளை வரவுசெலவுத் திட்டம் கொண்டிருக்கும் என்றார். பிரச்சினைகள் சூழ்ந்த உலகில் சிங்கப்பூர் அதன் எதிர்கால வாய்ப்புகளை எவ்வாறு கைப்பற்றும் என்பதைத் திட்டம் எடுத்துரைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சருமான திரு வோங் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் நாளை 14ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாக்கல் செய்வார்.
புதிய வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவுவது, சமூக உடன்பாட்டை வலுப்படுத்துவது, குடும்பங்களுக்கு உறுதியளிப்பது ஆகியவற்றுடன் ஒரே மக்களாகக் கூட்டாக மீட்சிபெறுவது வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என்று திரு வோங் விளக்கினார்
வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் பற்றி தமிழ் முரசின் இணையத்தளத்திலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட அதன் சமூக ஊடகத்தளங்களிலும் உடனுக்குடன் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

