ஜோகூர் பாரு-சிங்கப்பூர் வேக ரயில் இணைப்புப் பாதை (ஆர்டிஎஸ் லிங்க்) கட்டுமானம் சிங்கப்பூர் தரப்பில் பாதி நிறைவடைந்து இருக்கிறது. அந்த ரயில் திட்டம் 2026 முடிவில் செயல்பட ஆயத்தமாகும் வகையில் முன்னேறி வருகிறது.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (மே 11) இதனைத் தெரிவித்தார்.
திரு ஈஸ்வரனும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் ஜோகூர் பாருவில் கட்டுமான இடம் ஒன்றைப் பார்வையிட்டனர்.
ஜோகூர் நீரிணையில் சிங்கப்பூரையும் ஜோகூர் பாருவையும் இணைத்தபடி அமையும் ரயில் மேம்பாலத்தை தாங்கும் தூண்களில் ஒரு தூண் அங்கு கட்டப்படுகிறது.
இதனிடையே, இந்த வேக ரயில் வழித்தட கட்டுமானம் பற்றி கருத்து கூறிய மலேசிய அமைச்சர், மலேசிய தரப்பில் 36 விழுக்காட்டு பணிகள் நிறைவடைந்து இருப்பதாகக் கூறினார்.
இருதரப்பிலும் நிறைவேறியுள்ள முன்னேற்றத்தைப் பார்க்கையில், இந்த வேக ரயில் சேவை 2026 முடிவில் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தரப்பில் கட்டுமானப் பணிகள் கடந்த மார்ச் மாதம் 45 விழுக்காட்டு அளவு நிறைவை எட்டியிருந்தன.
மேம்பால ரயில் பாதையைத் தாங்கும் தூண்களைப் பதிக்கும் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஈஸ்வரன் வியாழக்கிழமை மலேசியாவுக்கு ஒரு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக அவர் கட்டுமான இடத்தைப் பார்வையிட்டார்.
மலேசிய அமைச்சருடன் பல அம்சங்கள் பற்றி தான் விவாதித்ததாகவும் இருதரப்பு உறவைப் பலப்படுத்த தாங்கள் கொண்டுள்ள உறுதியை இரு நாடுகளும் மறுஉறுதிப்படுத்தியதாகவும் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
கடல், தரை வழியாக இரு நாடுகளுக்கும் இடையில் போக்குவரத்து இணைப்புகளை மேலும் எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி தாங்கள் விவாதித்ததாகவும் திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் வேக ரயில் இணைப்புப் பாதை 4 கி.மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.
அது செயல்படத் தொடங்கும்போது ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகாரில் இருந்து சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த்துக்கு மக்கள் பயணம் செய்ய முடியும்.
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஐந்தே நிமிடங்களில் சென்று வரலாம்.
அந்த இடைவழி ரயில் சேவை வழியாக ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்தில் 10,000 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
அதனால் கடற்பாதையில் போக்குவரத்துத் தேக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் பயணிகள் அந்த வேக ரயில் நிலையத்தில் இருந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்துக்கு மாறிக்கொள்ளலாம்.
சிங்கப்பூர், மலேசியா இரு நாடுகளையும் சேர்ந்த சுங்க, குடிநுழைவு, தனிமை வசதிகள் உட்லண்ட்ஸ் நார்த்தில் ஒரே கட்டடத்திலும் புக்கிட் சாகார் நிலையத்திலும் அமைந்து இருக்கும்.
அதாவது பயணிகள் புறப்படும்போது மட்டும் குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற வேண்டும். சென்று சேரும் இடத்தில் நடைமுறைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் வேக ரயில் பற்றி 2010ல் அறிவிக்கப்பட்டது. 2018ல் அந்த ரயில் திட்டம் தயாராக இருந்தது.
பிறகு 2024 முடிவில் சேவையைத் தொடங்கலாம் என்று 2017ஆம் ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதுவும் மலேசிய வேண்டுகோளின் பேரில் 2019ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2020 ஜூலையில் அதிகாரபூர்வமாக மீண்டும் தொடங்கியது.