கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக இந்தியா அதன் கதவுகளை உலக நாடுகளுக்கு ஒரு மாதத்திற்கு மூடவுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியாவிற்குச் செல்ல அனைத்து விசாக்களும் நாளை (மார்ச் 13) முதல் ஏப்ரல் 15 வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
எனினும் இந்திய நாட்டவர் நாடு திரும்ப தடையில்லை. குறிப்பாக சிங்கப்பூரில் நீண்ட நாள் விசா, வேலை அனுமதி சீட்டு போன்ற விசாக்களிலில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்பினால் அவர்கள் 14 நாட்களுக்குச் சுயமாகத் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளவேண்டும்.
நேற்றிரவு (11-03-2020) ஒன்பது மணிவரை நிலவரப்படி இந்தியாவிற்குச் செல்ல அனுமதி மறுக்கப்படவில்லை. சிங்கப்பூரர்களுக்கு விசா வழங்கப்படுவது வழக்கம் போல நடந்துவந்தது.
அதை ஒட்டி இன்றைய தமிழ் முரசில் இந்தியா செல்வோர் அச்சப்பட வேண்டாம் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
ஆனால், நள்ளிரவுக்குப் பின்னர் உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 கிருமித் தொற்றை உலகளாவியத் தொற்றாக அறிவித்தப்பின்னர் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் விசா மறுக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
'ஓசிஐ' அட்டை வைத்துள்ளவர்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எனினும் அரசதந்திர விசா, ஐநா.சபை அதிகாரிகள், அனைத்துலக அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு தமிழ் முரசு இணையத் தளம், ஃபேஸ்புக் பக்கம், நாளிதழுடன் இணைந்திருங்கள்.