பன்னிரண்டு மணி நேர சேவைத் தடைக்குப் பிறகு, டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அதன் மின்னிலக்கச் சேவைகளை மீண்டும் பயன்படுத்த முடிகிறது.
புதன்கிழமை (மார்ச் 29) இரவு 7.30 மணியளவில் டிபிஎஸ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், டிபிஎஸ்/பிஓஎஸ்பி கைப்பேசி, இணையச் சேவைகளும் டிபிஎஸ் PayLah! மற்றும் டிபிஎஸ் mTrading சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தது.
நிலவரத்தை தாம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக டிபிஎஸ் குறிப்பிட்டது.
முன்னதாக, டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்கச் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது.
புதன்கிழமை காலை முதல் வாடிக்கையாளர்கள் வங்கியின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்தமுடியாமல் அவதியுற்றனர்.
‘டவுன்டிடெக்டர்’ என்ற இணையத்தளத்தில் காலை 7 மணி முதல் வாடிக்கையாளர்கள் புகார்கள் அளிக்கத் தொடங்கினர். காலை 8.30 மணி அளவில் புகார்கள் உச்சத்தை எட்டின.
இதைத் தொடர்ந்து காலை 9.20 மணிக்கு டிபிஎஸ் தனது வங்கிச் சேவையில் ஏற்பட்ட தடங்கல் குறித்து அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
டிபிஎஸ் டிஜிபேங்க், PayLah! செயலிகளை வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியவில்லை என்றும் வங்கியின் கட்டமைப்பும் தரவுகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் வங்கி தெரிவித்தது.
பிரச்சினையைச் சரிபார்த்து வருவதாகவும் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியவுடன் தகவல் வெளியிடப்படும் என்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் டிபிஎஸ் வங்கி தெரிவித்திருந்தது.
வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கி அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று டிபிஎஸ் கூறியது.
வங்கியின் சேவைத் தடை குறித்து சமூக ஊடகங்கள் வழி வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.