ரயில் சுரங்கப் பாதையில் 31 வயது ஆடவர் உயிர் இழந்ததால் நேற்றிரவு (பிப்ரவரி 25ஆம் தேதி) கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் சேவை தடைபட்டது.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் இரவு 9.48மணி அளவில், அதன் டுவீட்டர் பதிவில் பூகிஸ் நிலையத்திற்கும் அல்ஜூனிட் நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவை ஒரு ரயில் விபத்தால் தடைப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது.
உயிர் இழந்தவர் எப்படி ரயில் சுரங்கத்தினுள் நுழைந்தார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பதிவில், இச்சம்பவம் லவெண்டர் காலாங் ரயில் நிலையங்களின் இடையே சுமார் இரவு 9.30மணிக்கு நடந்தது என்று தெரிவித்தது.
அத்தருணம் ரயில் பாசிர் ரிஸ் திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
காலாங் ரயில் நிலையத்திலிருந்து 150 மீட்டர் தொலைவிலான பெருவிரைவு ரயில் தடத்தில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே அந்நபர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை மருத்துவ உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.