சிங்கப்பூரில் வீட்டு வாடகை கடந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, உலகளவில் ஆக அதிக வாடகை அதிகரிப்பைக் கொண்ட நகரமாக நியூயார்க்கை முந்தியது சிங்கப்பூர்.
வாடகை அதிகரிப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) சந்தையை விட்டுவைக்கவில்லை. அங் மோ கியோ, கெண்டன்மண்ட் சாலையில் உள்ள சில ஐந்தறை வீடுகளுக்கு மாத வாடகையாக $6,000க்குமேல் வசூலிக்கப்படுகின்றன.
2019லிருந்து 2021 வரை தனியார் வீட்டு வாடகை 9.3 விழுக்காடு கூடியது. ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு அது 29.7 விழுக்காடு எகிறியது. 2007க்குப் பதிவான ஆக வேகமான வளர்ச்சி இதுவாகும்.
வீவக வீட்டு வாடகை 15 ஆண்டுகளில் ஆக வேகமான வளர்ச்சி கண்டு 28.6 விழுக்காடு கூடியது.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், வரி, பணவீக்கம் உயர்ந்ததால், வீட்டு உரிமையாளர்கள் பலரும் செலவு அதிகரிப்பை வாடகைதாரர்களிடம் தள்ளிவிட்டனர்.
கொவிட்-19 பெருந்தொற்று நிலவரம் சீரடைந்து வெளிநாட்டுப் பயணங்கள் வழக்கநிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு மாணவர்கள், நிரந்தரவாசிகளின் வருகையால் வாடகை கூடியது.
கடந்த பிப்ரவரியில் வீவக வீட்டு வாடகை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியது. அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள ஐந்தறை வீடு $6,500க்கு வாடகைக்கு விடப்பட்டது. மறுவிற்பனை வீட்டிற்கான ஆக அதிக வாடகை இது. கெண்டன்மண்ட் சாலையில் உள்ள மற்றொரு ஐந்தறை வீடு அதே மாதம் $6,250க்கு வாடகைக்கு விடப்பட்டது.