நெருங்கிய நட்பு நாடுகள் என்ற முறையில் சிங்கப்பூர், மலேசியா இரண்டின் எதிர்காலமும் பின்னிப்பிணைந்திருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
இருநாடுகளும் ஆக்ககரமாக ஒத்துழைத்தால், இருதரப்புக்கும் வெற்றி கிட்டும். இரு நாட்டு மக்களும் வர்த்தகங்களும் நன்மையடைய முடியும் என்றார் அவர்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு நண்பகல் விருந்து அளித்து உபசரித்த வேளையில் திரு லீ இவ்வாறு கூறினார்.
மலேசியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு திரு அன்வார் இப்ராகிம் நேற்று சிங்கப்பூருக்கு முதல்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
இருநாடுகளும் தொடர்ந்து ஒத்துழைத்து, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்துத் திரு லீ மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த மலேசியப் பிரதமர் இருதரப்பு உறவில் தீர்க்க இயலாதது என்று எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். மலேசியாவும் சிங்கப்பூரும் மிகச் சிறந்த அண்டை நாடுகள். இருநாட்டு மக்களுக்கும் கூடுதல் நன்மையளிக்கும் வகையில் இரண்டும் மேலும் இணைந்து செயல்பட இயலும் என்றார் திரு அன்வார்.
நேற்றுக் காலை தாங்கள் இருவரும் பயன்மிக்க கலந்துரையாடலை நிகழ்த்தியதாகவும் நிலுவையில் இருக்கும் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் முன்னேற்றம் காண்பது குறித்துக் கலந்துபேசியதாகவும் திரு லீ கூறினார்.
பிரதமர் அன்வாரின் ஒத்துழைப்போடு சிங்கப்பூர்-மலேசியா உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என்று தாம் நம்புவதாகத் திரு லீ சொன்னார்.
இருநாடுகளும் புவியியல் ரீதியாகப் பிணைந்துள்ளன. இருதரப்புக்கும் பொதுவான வரலாறு உண்டு என்பதையும் இருநாட்டு மக்களுக்கு இடையில் ஆழமான குடும்ப, கலாசாரத் தொடர்பு இருப்பதையும் அவர் சுட்டினார்.
மலேசியாவில் சிங்கப்பூர் $56 பில்லியனுக்குமேல் முதலீடு செய்துள்ளது. இது மலேசியப் பொருளியல்மீதான சிங்கப்பூரின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகத் திரு லீ குறிப்பிட்டார்.
“கொவிட்-19 காலகட்டத்தில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கைகொடுத்தன. விநியோகம் தடைபடவில்லை,” என்று கூறிய அவர், திரு அன்வாருடன் தமக்கு நீண்டகாலத் தொடர்பு உண்டு என்றார்.
மலேசிய ஊழியர்கள் அதிகாலையில் எழுந்து சிங்கப்பூர் வர வரிசையில் காத்திருப்பது குறித்த திரு லீயின் அக்கறை தம்மை நெகிழ்த்தியதாக திரு அன்வார் கூறினார். இதற்குத் தீர்வுகாண்பது தங்கள் இருவரின் விருப்பம் என்றார் அவர்.
இருநாடுகளும் உணவுப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்தலாம்.
சிங்கப்பூருடன் உறவைத் தொடர்வதே மலேசியாவின் விருப்பம் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
தமது நிர்வாகம் புதியது என்றாலும் சிங்கப்பூருடனான உறவைப் பொறுத்தவரை தாமும் தம் அமைச்சரவையும் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக திரு அன்வார் கூறினார்.