மண்டாய் தகனச்சாலையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) பிற்பகல் 1 மணியளவில் முதலாம் சார்ஜண்ட் எட்வர்ட் எச்.கோவை தாங்கிய பேழை சவப்பெட்டியை ஏந்திச்செல்லும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது மழை பெய்யத் தொடங்கியது.
மத்திய தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சவப்பெட்டியைத் தூக்கினர். கடந்த வியாழக்கிழமை ஹெண்டர்சன் சாலை வீட்டில் நிகழ்ந்த தீச்சம்பவத்தின்போது தீயை அணைக்க உதவியவர்களும் அவர்களில் அடங்குவர்.
தீயை அணைக்க வந்த 19 வயது முழுநேர தேசிய சேவையாளரான கோ உயிரிழந்தார்.
முன்னதாக, எட்வர்ட்டுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற பற்றுறுதிச் சடங்கின்போது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 23 தீயணைப்பு நிலையங்களிலும் உபியில் உள்ள குடிமைத் தற்காப்புப் படையின் தலைமையகத்திலும் தீயழைப்பு மணி ஒலித்தது.
நண்பகல் வாக்கில், எண் 38 சின் மிங் டிரைவில் உள்ள 'டிரினிட்டி காஸ்கெட்'டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
உள்துறை துணை அமைச்சர் ஃபைசல் இப்ராகிமும் ஏறக்குறைய 250 குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
குடிமைத் தற்காப்புப் படை ஆணையர் எரிக் யாப், 1வது குடிமைத் தற்காப்புப் பிரிவுத் தளபதி கர்னல் ஃபிரோஸ் ரம்ஜான், மத்திய தீயணைப்பு நிலையத் தளபதி மேஜர் ஜோ ஓங் ஆகியோர் மலர் வளையங்களை வைத்தனர்.
முதலாம் சார்ஜண்ட் கோவின் பெற்றோரிடம் தேசியக் கொடியை ஆணையர் யாப் வழங்கினார்.
நாட்டிற்கு கோ ஆற்றிய கடமை முடிவுக்கு வருவதைக் குறிக்கும் விதமாக கடைசி மணி ஒலிக்கப்பட்டது. முதலாம் சார்ஜண்ட் கோவின் நல்லுடல் பின்னர் தகனம் செய்யப்பட்டது.

