தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது பின்லாந்து.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவுடன் திங்கட்கிழமை (மார்ச் 21) வெளியிடப்பட்ட இப்பட்டியலில் சிங்கப்பூர் 25ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 27ஆவது இடத்தில் இருந்தது.
மலேசியா (55), தாய்லாந்து 60), வியட்னாம் (65), பிலிப்பீன்ஸ் (76), இந்தோனீசியா (84) ஆகியவை முதல் நூறு இடங்களுக்குள் இருக்கும் மற்ற சில தென்கிழக்காசிய நாடுகள்.
சென்ற ஆண்டு 136ஆவது இடத்தில் வந்த இந்தியா இம்முறை 126ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனாலும், நேப்பாளம் (78), பாகிஸ்தான் (108), இலங்கை (112), பங்ளாதேஷ் (118) என்ற இரு அண்டை நாடுகளைக் காட்டிலும் அதன் நிலை மோசம்தான்.
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளது வியப்பளிக்கும் செய்தி. கடந்த ஆண்டு 98ஆம் இடத்திலிருந்த உக்ரேன் இம்முறை 92ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நியூசிலாந்து ஆகியவை உலகின் மகிழ்ச்சியான முதல் 10 நாடுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து பட்டியலின் கடைசி நிலையில், அதாவது 137ஆவது இடத்தில் இருக்கிறது ஆப்கானிஸ்தான்.
சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலின்மை ஆகிய ஆறு காரணிகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.