'தலைக்கவச' இந்தியர்: இதுவரை 56,000 பேருக்கு இலவசமாக வழங்கி சாதனை

'தலைக்கவச' இந்தியர்: இதுவரை 56,000 பேருக்கு இலவசமாக வழங்கி சாதனை

2 mins read
98bed337-ea70-4c4f-8917-22aa0d0d858b
இந்தியாவின் 'தலைக்கவச' மனிதர் ராகவேந்திர குமார். படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் நிகழும் கோரமான விபத்துகள் அன்றாடம் தலைப்புச் செய்திகளாக இடம்பெறுகின்றன.

தலைக்கவசம் அல்லது இருக்கைவார் அணியாதது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடுவது அல்லது மெத்தனமாகக் கையாள்வதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இவ்வேளையில், தலைக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் மோட்டார்சைக்கிள் ஓட்டுவோருக்குத் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தும் வலியுறுத்தியும் வருகிறார் பீகாரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்.

'இந்தியாவின் தலைக்கவச மனிதர்' என்று தம்மைக் கூறிக்கொள்ளும் திரு ராகவேந்திர குமார், 36, இணையவாசிகளிடையே பரவலாக அறியப்பட்டவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி கிருஷ்ணகுமார் என்ற இவரின் நண்பர், சாலை விபத்தில் சிக்கி மாண்டுவிட்டார். தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் சென்றதால் அவர் தலையில் காயமடைந்து இறந்துபோனார்.

இதனால் பெரிதும் மனமுடைந்துபோனார் திரு ராகவேந்திரா. அந்நிகழ்வு இவரின் வாழ்க்கையையே திசைமாற்றியது.

அதன்பின் தமது வேலையைவிட்ட இவர் சாலையில் தலைக்கவசமின்றி மோட்டார்சைக்கிளில் செல்வோருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்குவதையே வேலையாகக் கொண்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இவர் 56,000 தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார். இதற்காக இவர் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி செலவுசெய்துள்ளார்.

இதற்காக நொய்டாவிலிருந்த தம் வீட்டை ரூ.52 லட்சத்திற்கு விற்றுவிட்டார்; தம்மிடமிருந்த 14 மின்னிலக்க நாணயங்களை ரூ.75 லட்சத்திற்கு விற்றார். அத்துடன், இவரின் மனைவியும் தம்மிடமிருந்த நகைகளை விற்று ரூ. 15 லட்சம் கொடுத்தார். கையிலிருந்த சேமிப்பு முழுவதும் தலைக்கவசம் வாங்குவதிலேயே கரைந்துபோனது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் 30 பேரின் உயிரைக் காப்பாற்றி இருப்பதாகச் சொன்னார் திரு ராகவேந்திரா.

அண்மையில் இவர் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் தலைக்கவசமின்றி மோட்டார்சைக்கிளில் சென்ற இளையர் ஒருவரை நிறுத்தி, இலவசமாகத் தலைக்கவசம் வழங்கிய காணொளி இணையத்தில் பரவலானது.