குடும்பங்களுக்கும் சக்கரநாற்காலி பயன்படுத்துவோருக்கும் வசதியாக சாங்கி விமான நிலையத்தில் தானியக்க குடிநுழைவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குழுவாகப் பயணம் மேற்கொள்வோர் ஒன்றாக குடிநுழைவுச் செயல்முறைகளை செய்துமுடிக்க தானியக்க இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ள முதல் நாடு எனும் பெருமை சிங்கப்பூரைச் சேரும்.
முனையம் ஒன்றின் புறப்பாடு பகுதியிலும் முனையம் இரண்டின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளிலும் இந்தச் சிறப்பு உதவித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், நீண்டகால குடிநுழைவு அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் பயன்படுத்தலாம்.
"நான்கு பேர் வரையிலான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள், சக்கரநாற்காலி பயன்படுத்துபவர்கள் ஆகியோர் இந்தச் சிறப்பு உதவி தடத்தைப் பயன்படுத்தலாம்," என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் நேற்று தெரிவித்தது.
இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்தும் முன்பு குடும்பங்களும் சக்கரநாற்காலியைப் பயன்
படுத்துவோரும் அதிகாரிகள் இருக்கும் முனையங்களுக்குச் சென்று தங்கள் கடப்பிதழ்களைக் காட்ட வேண்டி இருந்தது.
புதிய தடங்களில், பயணிகள் தங்கள் கடப்பிதழ்களை ஸ்கேன் செய்யலாம். இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும் பயோமெட்ரிக் ஊடுருவல் கருவிகளும் பயணிகளின் கருவிழிகளையும் முகங்களையும் ஸ்கேன் செய்து குடிநுழைவுச் செயல்முறைகளை செய்து முடிக்கும்.
கருவிழி, முகம் ஆகியவற்றை ஸ்கேன் செய்ய முடியாதோருக்கு அவர்களது விரல் ரேகை பயன்படுத்தப்படும்.
புதிய தடங்களில் ஆறு வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்குக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் உதவுவர்.
இந்தத் தானியக்க குடிநுழைவு இயந்திரங்களை மற்ற முனையங்களில் படிப்படியாக பொருத்த இருப்பதாக ஆணையம் கூறியது.
நிலவழி, கடல்வழி பயணிகளுக்கான சோதனைச்சாவடிகளிலும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தகுதிபெறும் வெளிநாட்டுப்பயணிகளுக்கான தானியக்க குடிநுழைவு முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நீட்டிக்கப்படும்.
இந்தப் புதிய தடங்களைத் தொடங்குவதற்கு முன்பு உள்துறை அமைச்சு குழு அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடனும் சாங்கி விமான நிலைய குழுமத்துடனும் இணைந்து வடிவமைப்புச் சிந்தனை பயிலரங்கு களையும் மெய்நிகர் பயிற்சிகளையும் நடத்தியதாக ஆணையம் தெரிவித்தது.
குடிநுழைவு இயந்திரங்களின் அகலம், கடப்பிதழை வைக்கும் இடம், பயோமெட்ரிக் ஊடுருவல் கருவிகள் இருக்கும் இடம் ஆகியவை தொடர்பாக சக்கரநாற்காலி பயன்படுத்துவோரிடம் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி கருத்து சேகரிக்கப்பட்டது.
சேகரித்த கருத்துகளைப் பயன்படுத்தி புதிய தடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்த இருப்பதாகவும் ஆணையம் கூறியது.
"சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் முதலில் சாங்கி விமான நிலையத்தைத்தான் பார்க்கிறார்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு இனிமையானதாக இருந்தால் சிங்கப்பூரைப் பற்றிய அவர்களது எண்ணம் நல்லதாக இருக்கும். சிங்கப்பூரில் அவர்கள் மேற்கொள்ளும் பயண அனுபவம் மகிழ்ச்சியானதாக இருக்கும்," என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சுற்றுப்பயணத்துறை மூத்த விரிவுரையாளர் டாக்டர் மைக்கல் சியாம் தெரிவித்தார்.
"புதிய தடங்கள் சக்கரநாற்காலி பயன்படுத்துவோருக்கு ஏதுவானதாக இருக்கும். அவற்றை அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாது, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் அது சௌகரியத்தைத்தரும்," என்று உடற்குறையுள்ளோருக்குச் சேவை வழங்கும் எஸ்பிடி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு அபிமன்யு பால் தெரிவித்தார்.

