ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்புக் கட்டுமானம் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. சிங்கப்பூர் தரப்பில் 45 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் உள்ள ஒரு வேலையிடத்திற்குச் சென்றார். அப்போது அவர் அந்த ரயில் இணைப்புப் பணிகள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தார்.
விரைவு ரயில் சேவை 2026ஆம் ஆண்டு முடிவில் செயல்படத் தொடங்கும் வகையில் பணிகளை முடிக்க வேண்டும் என்பது இலக்கு என்றும் அது திட்டமிட்டபடி நடந்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
புதிய ரயில் இணைப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட தொடர்பு வசதிகள் மேம்படும். இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளும் பொருளியல், இதர தொடர்புகளும் மேம்பாடு காணும் என்றார் திரு ஈஸ்வரன்.
‘ஆர்டிஎஸ்’ எனப்படும் அந்த 4 கி.மீ. நீள அதிவேக ரயில் இணைப்பு இடைவழிச் சேவை செயல்படத் தொடங்கும்போது பயணிகள் ஜோகூர் பாருவில் இருக்கும் புக்கிட் சாகர் நிலையத்தில் இருந்து உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்கு வரலாம். அதேபோல உட்லண்ட்ஸ் நார்த்தில் இருந்து ஐந்தே நிமிடங்களில் சென்றுவிடலாம்.
அந்த ரயில் சேவை ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் 10,000 பயணிகளை ஏற்றிச் செல்லும்.
அமைச்சர் ஈஸ்வரன் படகில் ஜோகூர் நீரிணைக்குச் சென்று சிங்கப்பூர் தரப்பில் அந்த ரயில் சேவைக்காக அமைக்கப்படும் தூண்களில் ஒன்றைப் பார்வையிட்டார்.
மொத்தம் 12 தூண்கள் கட்டப்படுகின்றன. அவை சிங்கப்பூர் பக்கம் அமையும் 730 மீட்டர் நீள ஆர்டிஎஸ் மேம்பால ரயில்பாதையைத் தாங்கி நிற்கும்.
அத்தூண்களில் ஒன்பது தூண்கள் ஜோகூர் நீரிணையில் கட்டப்படுகின்றன. சராசரியாக அவை 30 மீட்டர் ஆழம்வரை கடலுக்கடியில் நீண்டு இருக்கும். எஞ்சிய மூன்று தூண்களும் தரையில் அமையும்.
ஜோகூர் நீரிணை நடுவே மேம்பால ரயில்பாதை கடல்மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரத்தில் இருக்கும். சிங்கப்பூர் நோக்கி வர வர அதன் உயரம் குறையும்.
பயணிகள் இப்போது கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக புதிய சுங்க, குடிநுழைவுத் துறை வளாகத்தைச் சென்றடையலாம்.