சிங்கப்பூருடனான இணைப்புப் பாலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண ஜோகூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசலை முடிவுக்குக் கொண்டு வருவதன் தொடர்பில் மலேசியக் கூட்டரசாங்கத்துடன் ஜோகூர் மாநில அரசு இணைந்து பணியாற்றுவதும் தொடரும் என்றார் அவர்.
சிங்கப்பூரர்களுக்கான தானியக்க வாயில் பயன்பாட்டை விரிவுபடுத்துவது, மோட்டார்சைக்கிள் தடங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, எல்லைக் கட்டுப்பாடு தொடர்பான அமைப்புகளின் முகப்புகளை ஒன்றிணைப்பது ஆகியன உள்ளிட்ட அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் திரு காஸி கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 22) உரையாற்றிய அவர், “இந்தப் போக்குவரத்து நெரிசல் பன்னெடுங்காலமாக இருந்துவருவதை நாம் அறிவோம். இதற்குத் தீர்வுகாண மலேசியக் கூட்டரசுடன் இணைந்து பணியாற்றும் உணர்வைக் கைவிட்டுவிடக்கூடாது,” என்றார்.
ஜோகூர் நீரிணையில் நான்கு பிரிவுகளாக உள்ள அமைப்புகளின் முகப்புகளை ஒன்றாக்கி பயணிகளுக்கு அனுமதி வழங்கும் ஒற்றை முனை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
“கடப்பிதழைக் காட்டி அனுமதி பெறவும் கட்டணத்தைச் செலுத்தவும் பயணிகளை இருமுறை நிறுத்த வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. முகப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் ஓரிடத்தில் அவர்கள் அனுமதிக்கான நடைமுறைகளைப் பின்பற்றினால் போதுமானதாக இருக்கும்,” என்றார் திரு காஸி.
விடுமுறை முடிந்தும் நெரிசல்
இதற்கிடையே, மார்ச் பள்ளி விடுமுறை முடிவுக்கு வந்தும் உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் சிங்கப்பூருக்கு வரும் வாகனங்களால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் காரணமாக குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்தது குறித்து வாகனமோட்டிகள் ஃபேஸ்புக்கில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.