ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றுள்ளது.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப்ரவரி 23) தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் நீடித்து வந்த இரட்டைத் தலைமை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்து உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கியதற்குப் பிறகு அவருக்குக் கிடைத்து இருக்கும் இரண்டாவது வெற்றியாக இன்றைய தீர்ப்பு கருதப்படுகிறது.
அத்துடன், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் அமையும் என்பதால் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது வழக்கப்பட்டு உள்ள தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
தீர்ப்பு வெளியானதும் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். சில தொண்டர்கள் பழனிசாமியின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து வாழ்த்தினர்.
“தர்மம் வென்றுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைந்தது,” என்று பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இனி எடப்பாடி தலைமையில் அதிமுக வீரநடை போடும். இந்தத் தீர்ப்பு அதிமுகவிற்கு ஊக்கம் தரும். பொதுமக்கள் பார்வையில் இயக்கம் ஒன்றுபட்டுள்ளது,” என்றும் அவர்கள் கூறினர்.
அதிமுகவுக்கும் ஓ.பன்னீல்செல்வத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை தீர்ப்பு காட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம். அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது,” என்றார்.
எதிர்த்தரப்பினரும் பழனிசாமியை வாழ்த்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமது டுவிட்டர் பதிவில், “அடிப்படைத் தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியாவதற்கு முன் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் தொண்டர்கள் என்பக்கம் எப்போதும் இருப்பார்கள். தீர்ப்பு பாதகமாக வந்தால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.