ஜோகூர் பாரு: கணவனும் மனைவியுமாக மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தபோது, விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.
இச்சோக சம்பவம் மலேசியாவின் ஜோகூர் பாரு, புக்கிட் இண்டா நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (16-03-2013) காலையில் நிகழ்ந்தது. துவாஸ் சோதனைச்சாவடியில் இருந்து கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தொலைவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
திரு லோ கிம் சியோங், 36 - திருவாட்டி டான் லே ரூ, 30, என்ற அவ்விணையர் இருவரும் நிகழ்விடத்திலேயே மாண்டுபோனதாகக் கூறப்பட்டது.
இவ்விணையருக்கு ஏற்கெனவே மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில், திருவாட்டி டான் வரும் மே மாதம் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்க இருந்ததாக திரு லோவின் இளைய சகோதரி லோ ஷி மெய் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவின் செட்டியா இண்டா பகுதியில் அவ்விணையர் வசித்து வந்தனர் என்றும் பல ஆண்டுகளாக அவர்கள் சிங்கப்பூர் சென்று வேலைசெய்து வந்தனர் என்றும் திருவாட்டி லோ கூறினார்.
திரு லோ ‘டாப்ஸ்டீல் சொல்யூசன்ஸ் ஏஷியா’ நிறுவனத்தில் சேமிப்புக்கிடங்கு உதவியாளராகவும் திருவாட்டி டான் ‘விஸ்டா ஹார்ட்வேர் சப்ளைஸ்’ நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராகவும் வேலைசெய்து வந்தனர்.
இருவரின் உடல்களும் நாளை ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக திருவாட்டி லோ கூறினார்.