டகோட்டா கிரசென்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் படிக்கட்டுகளில் 32 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) காலை மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
காலை 9.52 மணிக்கு அச்சம்பவம் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. புளோக் 58 டகோட்டா கிரசென்ட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது அங்கு அந்த ஆடவர் அசைவின்றி கிடந்ததைக் கண்டறிந்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் ஒருவர், அந்த ஆடவர் இறந்துவிட்டதாகக் கூறினார்.
அந்த ஆடவர் அங்கு வசித்து வந்த குடியிருப்பாளர் என அறியப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆயுதம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்தை வழக்கத்திற்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தியுள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த புளோக்கின் ஒன்பதாவது, 10வது தளங்களுக்கு இடையிலான படிக்கட்டுகளில் அந்த ஆடவரின் சடலம் கண்டறியப்பட்டதாக ஷின் மின் சீன நாளிதழ் செய்தியில் குறிப்பிட்டது. படிக்கட்டுகள், தரை மற்றும் குழாயில் ரத்தக் கறை காணப்பட்டது.
அந்த ஆடவரின் மரணம் தமக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் தந்துள்ளதாக 76 வயது குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். அக்கம்பக்க குடியிருப்பாளர்களுடன் அந்த ஆடவர் நன்றாகப் பழகுவார் என்றும் அவர்களுக்காக பொருள்களை வாங்கித் தருவார் என்றும் அக்குடியிருப்பாளர் சொன்னார்.


