மார்சிலிங் வட்டாரத்தில் உள்ள கடைக்கு வெளியே பெட்ரோல் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்ட ஆடவர் உயிர் இழந்துவிட்டார்.
அவர்மீது பெட்ரோலை ஊற்றியவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
அது தற்போது கொலைக் குற்றச் சாட்டாக மாற்றப்பட்டுள்ளது.
65 வயது டே கெங் ஹோக், 37 வயது டான் கிம் ஹீ மீது தீயை வேகமாகப் பரவச் செய்யும் திரவத்தை ஊற்றினார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மார்சிலிங் கிரெசன்ட் புளோக் 210 அருகே கடந்த டிசம்பர் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சம்பவம் நடந்தது.
ஹெங் ஹோக் மினிமார்ட் எனும் கடைக்கு வெளியே டே, திரு டான் மீது திரவத்தை ஊற்றி, லைட்டரைக் கொண்டு தீயைப் பற்ற வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.
திரு டான் எப்போது உயிர் இழந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
சம்பவம் நடந்த ஹெங் ஹோக் மினிமார்ட்டுக்கு அவர் தான் உரிமையாளர் என்று தெரிய வந்துள்ளது.
ஆக்ரா எனப்படும் கணக்கியல் , நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட டே விஷிங் வெல் பியூட்டி பார்லர் எனும் அழகு நிலையத்தின் உரிமையாளர் ஆவார்.
அந்த நிலையம் பென்கூலன் ஸ்திரீட்டில் அமைந்துள்ளது.
சம்பவம் நடந்தபோது திரு டான் தீக்காயங்களுடன் காணப்பட்டதாகவும் அவர் கூ டெக் பூவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியிருந்தது.
திரு டான் சுயநினைவுடன் இருந்தார் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.
டே, சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

