சிராங்கூன் அவென்யூ 4ல் உள்ள சிராங்கூன் சமூகப் பூங்காவில் புத்தாண்டு தினத்தன்று 28 வயது ஆடவர் ஒருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
அன்றைய தினம் பிற்பகல் 1.40 மணியளவில் உதவி கோரி தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆடவர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவ ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மரணத்தில் சந்தேகப்படும்படி எவ்விதப் பின்னணியும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை அறிவித்தது.
சிராங்கூன் சமூகப் பூங்காவுக்குச் செல்வோர் பயன்படுத்துவதற்கான இரு கழிவறைகளில் ஒன்றில் அந்த ஆடவர் சுயநினைவின்றி காணப்பட்டதாக சீன நாளிதழான ஷின்மின் தெரிவித்தது.
அவரது துணிமணிகள் வைக்கப்பட்டதாக நம்பப்படும் இரு பிளாஸ்டிக் பைகள் காவல்துறை காருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அவ்விரு கழிவறைகளும் சுமார் ஓராண்டிற்கு முன்பு பூங்காவில் வைக்கப்பட்டதாகவும் அவை அவ்வளவாக பயன்படுத்தப்பட்டதில்லை என்றும் அவ்வட்டாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.