சிங்கப்பூர் எஞ்சியுள்ள அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் தளர்த்தவுள்ளது. வரும் திங்கட்கிழமை, பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
எனினும், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், தாதிமை இல்லங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து முகக்கவசங்கள் அணியவேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் கிருமிப் பரவல் நிலைமை சீரடைந்து வருவதால், தேசிய அளவிலான நோய்ப் பரவலுக்குரிய விழிப்புநிலை எச்சரிக்கைக் கட்டமைப்பு மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
எல்லைக் கட்டுப்பாடுகளும் அடுத்த வாரத்திலிருந்து தளர்த்தப்படும். சிங்கப்பூருக்கு வருகையளிக்கும் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுற்றுப்பயணிகள் கொவிட்-19 பரிசோதனை சான்றிதழ் காட்டத் தேவையில்லை.
தடங்களைக் கண்டறியும் கட்டமைப்புகளும் முடக்கப்படும். அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவும் நீக்கப்படும். கொவிட்-19 தொடர்பான நிலைமையை சுகாதார அமைச்சு நிர்வகிக்கும்.

