உணவுக்கடைகளில் வரும் திங்கள் (ஜூன் 21ஆம் தேதி) முதல் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படுகிறது. ஆயினும், முன்னர் அறிவிக்கப்பட்டபடி அதிகபட்சம் ஐவர் என்றில்லாமல், ஒரு குழுவிற்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று தெரிவித்தார்.
ஜூலை மாத நடுப்பகுதியில் இருந்து ஒரு குழுவிற்கு அதிகபட்சம் ஐவர் இடம்பெறும் வகையில் வரம்பு அதிகரிக்கப்படும் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான், நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
உள்ளூரில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவு மையத்தில் ஒரு புதிய கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகியுள்ளது.
சமூகத்தில் கிருமிப் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மாதம் 16ஆம் தேதியிலிருந்து உணவுக்கடைகளில் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை.
கடந்த வாரத்தில் மட்டும் சமூகத்தில் 94 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் குறிப்பிட்டார். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 41ஆக இருந்தது. தொடர்பின்றி பாதிக்கப்பட்டோர் விகிதம் 19% என்ற அளவில் நிலையாக இருந்து வருகிறது.
கொரோனா பரிசோதனைத் திறனும் தொடர்புகளின் தடமறியும் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளதாலும் மக்கள்தொகையில் நல்லதொரு விகிதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும் கிருமிப் பரவல் தடுப்பில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டு வருவதாக திரு ஓங் கூறினார்.
வரும் திங்கள் முதல், ஒரு குழுவில் ஒரே குடும்பத்தைச் சேராத இருவர்க்குமேல் இருந்தால், அவர்கள் பல மேசைகளில் பிரிந்து அமர்ந்தாலும், உணவகங்களில் ஒன்றாகச் சேர்ந்து உண்ண அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சு கூறியிருக்கிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல மேசைகளில் அமர்ந்தபடி உண்ணலாம் என்று அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
உணவகங்களில் இசைத்தட்டு ஒலிக்க அனுமதியில்லை. அங்கு குழுக்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளிபேணப்பட வேண்டும்.
“அமலாக்க நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்படும். பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் மீறப்பட்டால் உறுதியான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உண்ணும்போது அல்லது பானம் அருந்தும்போது தவிர, மற்ற நேரங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்,” என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அடுத்த மாத நடுப்பகுதிவரை திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான தடை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அதிகபட்சம் குழுவிற்கு இருவர் என்ற வகையில், உடற்பயிற்சிக்கூடங்களும் உடற்தகுதி நிலையங்களும் முகக்கவசமின்றி உள்ளரங்கு விளையாட்டு, பயிற்சி நடவடிக்கைகளை நாளை மறுநாள் முதல் தொடங்கலாம். வகுப்புகள் எனில் பயிற்றுநருடன் சேர்த்து 30 பேர்வரை பங்கேற்கலாம்.
தனிநபர்களுக்கு இடையே குறைந்தது 2 மீட்டர், குழுக்களுக்கு இடையே 3 மீ. என, பாதுகாப்பு இடைவெளியுடன் அவை இடம்பெற வேண்டும்.
முகக்கவசத்துடன் கூடிய நடவடிக்கைகளிலும் வெளிப்புறத்தில் முகக்கவசமில்லா நடவடிக்கைகளிலும், அதிகபட்சம் குழுவிற்கு ஐவர், வகுப்பிற்கு 30 பேர் என்ற வரம்பில் பங்கேற்கலாம்.
வேலையிடங்களிலும் பொது இடங்களிலும் கலந்துறவாடலைக் குறைத்து, அதன்வழி கொரோனா தொற்றும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, வீட்டிலிருந்து வேலை செய்வது இயல்பான நடைமுறையாகத் தொடரும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.