கடந்த நீண்ட வாரயிறுதியில் 950,000க்கும் அதிகமான பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரையிலான ஐந்து நாள்களில் சிங்கப்பூரிலிருந்து 491,400 பேர் மலேசியாவுக்குச் சென்றனர். அதே காலகட்டத்தில் 462,400 பேர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.
இதற்கு முன்னதாக, புனித வெள்ளி வாரயிறுதியின்போது 436,800 பேர் இருநாட்டு தரைவழி எல்லைகளைக் கடந்தனர். சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகு வந்த முதல் பொது விடுமுறையாக புனித வெள்ளி அமைந்தது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், கடந்த நீண்ட வாரயிறுதியில் பேருந்துகளில் சென்றவர்களைவிட கார்கள், மோட்டார்சைக்கிள்களில் சென்றவர்களே அதிகம். சிங்கப்பூர்-மலேசியா எல்லைகளைக் கடந்தவர்களில் 660,400 பேர் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தினர். ஒப்புநோக்க, 293,400 பேர் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
எல்லைத் தாண்டிய பொதுப் பேருந்துச் சேவைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வழங்கப்பட்டு வருவதே இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக இருக்கலாம்.