சிங்கப்பூரின் 58ஆம் தேசிய தினக் கொண்டாட்டங்கள் ‘ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறவுள்ளன.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று பாடாங் திடலில் நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் காவல்துறை ஆகியவற்றின் கூட்டு இசைப்படையுடன் யூஹுவா, போவன் உயர்நிலைப் பள்ளிகளின் இசைக்குழுக்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கவிருக்கின்றன.
அதிபருக்கான மரியாதை பீரங்கி குண்டு முழக்கம், கொடிகளுடன் வலம்வரும் விமானங்கள், வண்ணப் புகை வெடிகள் உள்ளிட்ட வழக்கமான அம்சங்களுடன் புதிதாக முழுமைத் தற்காப்பு அணிவகுப்பும் இவ்வாண்டு இடம்பெறும்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை தனது 55ஆம் நிறைவைக் கொண்டாடுவதால் கூடுதல் சிறப்புடைய வான் சாகசங்களையும் எதிர்பார்க்கலாம்.
தேசிய தின அணிவகுப்பு குறித்த இந்தத் தகவல்கள் சிங்கப்பூர் ஆயுதப் படை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வியாழக்கிழமை (மே 25) வெளியிடப்பட்டன.
தேசிய தினத்திற்குச் சில நாள்களுக்கு முன்பு, தேசிய தினத்தைய ஒட்டிய கொண்டாட்டங்கள் ஐந்து விளையாட்டரங்கங்களிலும் தீவெங்கும் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளிலும் நடந்தேறும்.
‘கெட் எக்டிவ்!’ சிங்கப்பூர் குடியிருப்புப் பகுதிக்கான விழா, எல்லா வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் குடும்ப நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கும் 6ஆம் தேதிக்கும் இடையே பிடோக் விளையாட்டரங்கம், ஜூரோங் வெஸ்ட் விளையாட்டரங்கம், தோ பாயோ விளையாட்டரங்கம், உட்லண்டஸ் விளையாட்டரங்கம், அவர் தெம்பனீஸ் ஹப் விளையாட்டரங்கம் (ஆகஸ்ட் 6ஆம் தேதி மட்டும்) ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
தேசிய தினத்தன்று, போர்விமானங்கள் கொடிகளுடன் குடியிருப்புப் பகுதிகளைக் கடந்துசெல்லும்.
தேசத்தை வலுப்படுத்தும் சிறப்பு இயக்கங்கள்
பொதுமக்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளின் வழி சிங்கப்பூர் மீதான நாட்டு மக்களின் கடப்பாட்டை வலுப்படுத்தவும் தொண்டாற்றுதலை ஊக்குவிக்கவும் ‘#கிவ்எஸ்ஒன்எஸ்ஜி‘ ‘#யுனைட்டட்எஸ்ஒன்எஸ்ஜி‘ ஆகிய இரண்டு இயக்கங்கள் இவ்வாண்டின் தேசிய தினத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளன.
#கிவ்எஸ்ஒன்எஸ்ஜி‘ இயக்கம், தொண்டூழியத்தையும் லாப நோக்கமற்ற இயக்கங்களில் பங்காளிகளாவதையும் ஊக்குவிக்க முனைகிறது.
பல்வேறு தளங்கள் வாயிலாக சிங்கப்பூரர்கள் ஒன்றுகூடி விளையாட்டு, மரபுடைமை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட ‘#யுனைட்டெட்எஸ்ஒன்எஸ்ஜி‘ இயக்கம் ஊக்குவிக்கிறது.
இந்த இரண்டு இயக்கங்களைச் சார்ந்த நடவடிக்கைகள் தீவெங்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
தேசிய தினப் பாடல்
‘சுடர்விட்டு ஒளிர்க’ என்ற பொருளைக் கொண்ட தலைப்பில் இவ்வாண்டின் தேசிய தினப் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
53‘ஏ’, தி ஐலண்ட் வாய்சஸ், லியுலோ, ஒலிவியா ஓங், ஷிகா ஷே, இமான் ஃபாண்டி, லினியத் ஆகியோர் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளனர்.
கொவிட்-19 கிருமிப்பரவலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முன்னோக்கிச் செல்வதைக் குறிக்கும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருப்பதாக பாடலை இயற்றிய டான் ரிச்மண்ட், 47, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இப்பாடல், அதைக் கேட்பவர்களை மகிழ்விக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும் என எண்ணினேன். சிங்கப்பூரர்கள் எல்லாரும் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட ஊக்குவிப்பதால் ‘ஷைன் யோர் லைட்’ என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.