தேசிய தின அணிவகுப்பின் மாலை நிகழ்ச்சியின்போது காட்சித் திரையில் தோன்றிய தமிழ்ச் சொற்களில் எழுத்துப் பிழைகள் இருந்தது.
அதன் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
தேசிய தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘தி ஸ்டார்’ மேடைக் கலைகள் நிலையத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பானது இந்நிகழ்ச்சி.
ஓர் அங்கத்தின்போது மேடைப் பின்னணியில் அமைந்திருந்த பெரிய ‘எல்இடி’ திரைகளில் தமிழ்ப் பாடல் வரிகள் காண்பிக்கப்பட்டன.
ஆனால் சொற்களுக்கு ‘அனிமேஷன்’ சேர்க்கப்பட்டதால், ஒரு வரியில் இடம்பெற்ற எழுத்துகள் கோர்வையற்றதாகிவிட்டன என்று நிர்வாகக் குழுத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஃபிரெடரிக் சூ கூறினார்.
“இதற்காக தேசிய தின அணிவகுப்பு 2020 நிர்வாகக் குழு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்ப் பாடல் வரிகள் மற்றும் வேறு மொழிப் படங்கள், படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவை துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய நிர்வாகக் குழு, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றது.
“அனிமேஷன் சேர்க்கப்படுவதற்கு முன் அனைத்து வரிகளும் சரியாக இருந்தன. தயாரிக்கும் முறையை நாங்கள் மேலும் வலுப்படுத்தி இனி வரும் தேசிய தின நிகழ்வுகளைத் திட்டமிடும்போது கருத்தில் கொள்வோம்,” என்றார் திரு சூ.
நிகழ்ச்சியின்போது ‘My Singapore’ என்ற தொடர் தமிழில் ‘என் சிங்கப்பூர்’ என்றிருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக எழுத்துகள் தப்பும் தவறுமாக அமைந்ததுடன் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை.
‘நண்பர்கள்’ மற்றும் ‘சகோதரர்கள்’ ஆகிய சொற்களும் பிழையுடன் அமைந்திருந்தன.
இதன் தொடர்பில் 36 வயது உள்ளூர்க் கலைஞர் திரு கார்த்திகேயன் சோமசுந்தரம், திங்கட்கிழமை இரவு தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழ்மொழி என வரும்போது கூடுதல் கவனம் தேவைப்படுவதாக அவர் சொன்னார். பிழைகள் ஏற்படலாம் என்றாலும் யாராவது பிழைகளைக் கண்டறிந்து சுட்டியிருக்க வேண்டும் என்றார் அவர்.
இது முதல் முறை அல்ல என்றும் அதிகாரத்துவ ஆவணங்களிலும் இதுபோன்ற எழுத்துப் பிழைகள் தமிழில் ஏற்பட்டுள்ளது என்றும் கூறித் தம் வருத்தத்தைத் தெரிவித்திருந்தார் திரு கார்த்திகேயன்.
“இது பலமுறை நடந்து வருகிறது. தமிழில் எழுதுவது, பேசுவது மூலம் தமிழ்ச் சமூகத்தினரைச் சென்றடையும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கினாலும், மொழி துல்லியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திடத் தவறிவிடுகிறார்கள்,” என்றார் அவர்.
“சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்கு மேலும் ஒரு படிதான் தேவை. ஆனால் அதைச் செய்யாமல் விடும்போது, அங்கு மெத்தனப் போக்கு தெரிகிறது,” என்று சுட்டினார்.
இதற்கு முன் 2017ஆம் ஆண்டில் தொடக்கநிலை ஐந்து மாணவர்களுக்குத் வழங்கப்பட்ட தேசிய தின அணிவகுப்பு விளம்பரச் சிற்றேடுகளில் பிழைகளுடன் தமிழ்ச் சொற்கள் அச்சிடப்பட்டன.
அவ்வாண்டின் ஏற்பாட்டுக் குழு அதன் தொடர்பில் மன்னிப்பு கோரியது.
அசலில் தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக இருந்ததாகவும் அச்சிட்டபோது பிழைகள் வந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கேட்ட கேள்விக்கு தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பதிலளித்திருந்தார்.