துருக்கியையும் சிரியாவையும் உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 4,000க்கு உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 என்று பதிவான நிலநடுக்கம் இரு நாடுகளையும் தாக்கியது.
நிலநடுக்கத்தால் பல்லாயிரம் பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பல மருத்துவமனைகளும் சேதமடைந்தன.
இருநாடுகளிலும் குளிர்காலம் என்பதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பல கட்டடங்களிலிருந்து உதவி கோரி குரல்கள் கேட்கப்படுவதாகக் கூறப்பட்டது. பலர் வெறும் கைகளைப் பயன்படுத்தி புதையுண்ட தங்கள் உறவினர்களைத் தேடி வருகின்றனர்.
துருக்கியில் சுமார் 3000 பேர் மாண்டுபோனதாகவும் 16,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்டை நாடான சிரியாவில் குறைந்தது 1,500 பேர் இறந்துவிட்டதாகவும் கிட்டத்தட்ட 3,500 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாண்டோர் எண்ணிக்கை 20,000யை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

