சிங்கப்பூர்வாசிகள் மலேசியாவிற்கும் மலேசியக் குடியிருப்பாளர்கள் சிங்கப்பூருக்கும் பயணம் செய்யும்போது எளிதாகக் கட்டணம் செலுத்த ஏதுவாக புதிய ‘கியூஆர்’ குறியீடு கட்டண இணைப்பு முறை இன்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பங்குகொள்ளும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கும் பெறும் சேவைகளுக்கும் ‘நெட்ஸ்’ மற்றும் ‘டூயிட்நவ் (DuitNow)’ ‘கியூஆர்’ குறியீடு மூலம் கட்டணம் செலுத்தலாம்.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் மலேசிய தேசிய வங்கியும் கூட்டாக இதனை அறிவித்துள்ளன.
மின்வணிகத்திற்கான எல்லை கடந்த இணையவழிப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதரவளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்போதைக்கு சிங்கப்பூர் தரப்பில் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய வங்கிகள் இத்திட்டத்தில் பங்குகொள்கின்றன.
அதுபோல, மலேசியத் தரப்பில் அம்பேங்க் மலேசியா, பூஸ்ட், சிஐஎம்பி வங்கி, ஹோங் லியோங் வங்கி, மலாயன் பேங்கிங், பப்ளிக் வங்கி, ரேஸர் மெர்ச்சன்ட் சர்விசஸ், டிஎன்ஜி டிஜிட்டல், யுஓபி மலேசியா ஆகிய நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி ‘பேநவ்’ மற்றும்’டூயிட்நவ்’ வசதிகள் மூலமாக இருநாடுகளுக்கு இடையே ஒருவர் இன்னொருவருக்குப் பணம் அனுப்பும் வசதியையும் இவ்வாண்டு இறுதிவாக்கில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.