கெந்திங் மலையில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்ட சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் மாண்டவர்களில் இன்னும் கண்டுபிடிக்காதிருந்த கடைசி சடலம் அது.
சனிக்கிழமை மாலை 4.53 மணிக்கு மலேசிய மீட்புப் பணியினர் சிறுவனின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
பாத்தாங் காலியில் நடந்த நிலச்சரிவில் கடந்த ஒன்பது நாள்களாக அவர்கள் உயிர் தப்பியவர்களையும் பின்னர் சடலங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
நிலச்சரிவில் மாண்ட 31வது நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் மலேசிய ஊடகங்களிடம் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 80 அதிகாரிகள் இன்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மீட்புப் பணிகளை அரசாங்கம் முடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 16ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு, கடந்த 30 ஆண்டுகளில் மலேசியாவில் ஏற்பட்ட மூன்றாவது ஆக மோசமான நிலச்சரிவாகும்.
1993ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரின் அருகேயுள்ள புக்கிட் அந்தாராபங்சாவில் இருந்த தனியார் கூட்டுரிமை வீடுகள் சரிந்து விழுந்த சம்பவமே ஆக மோசமான நிலச்சரிவாகும். அதில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

