கொவிட்-19 பெருந்தொற்றின்போது சிங்கப்பூரர்களின் உடல் அசைவு குறைந்தது: ஆய்வு

கொவிட்-19 பெருந்தொற்றின்போது சிங்கப்பூரர்களின் உடல் அசைவு குறைந்தது: ஆய்வு

3 mins read
28876548-98ce-4537-a699-46609bd65329
Google News Preferred Icon

கொவிட்-19 பெருந்தொற்று சிங்கப்பூரர்களின் சுகாதாரத்தைக் கணிசமாகப் பாதித்துள்ளது. குறைவானோரே உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

நாட்பட்ட நோய், புற்றுநோய் பரிசோதனைகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

சிங்கப்பூரர்கள் தங்களது சுகாதாரத்தைக் கவனித்துக்கொள்வதற்கான அவசியத்தை இது உணர்த்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வை அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) வெளியிட்டது.

Pneumococcal மற்றும் சளி, காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான விகிதம் அதிகரித்து இருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது. மேலும், மனவுளைச்சலை சமாளிக்க சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களிடம் உதவி கோர கூடுதலானோர் முன்வந்தனர்.

2020 ஜூலைக்கும் கடந்த ஆண்டு ஜூலைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 18 முதல் 74 வயதுக்குட்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சரிந்தது. பெருந்தொற்று காரணமாக பரிசோதனை சேவை உள்ளிட்ட அவசரமற்ற சேவைகள் தள்ளிவைக்கப்பட்டது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அமைச்சு கூறியது.

குறிப்பாக, நாட்பட்ட நோய்களுக்கான பரிசோதனை விகிதம் 2019ல் 66 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு இது 59 விழுக்காடாக சரிந்தது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஏறக்குறைய 7 விழுக்காட்டினர், தங்களுக்கு நீரிழிவு இருப்பதாகத் தெரிவித்தனர். ஏறத்தாழ 14 விழுக்காட்டினர் தங்கள் உயர் ரத்தக் கொழுப்பு இருப்பதாகவும் 16 விழுக்காட்டினர் தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் உண்மை நிலவரத்தை இது பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்று அமைச்சு கூறியது.

"கொவிட்-19 பெருந்தொற்றின்போது குறைவானோரே நாட்பட்ட பரிசோதனைக்குச் சென்றனர். எனவே, நாட்பட்ட நோய்கள் பெரிய அளவில் கண்டறியப்படாமல் இருக்கலாம்," என்று அது சொன்னது.

எடையை அளவிடுதல், சிறுநீர் மற்று ரத்தப் பரிசோதனை செய்தாலொழிய, தங்களுக்கு நாட்பட்ட நோய்கள் இருப்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' எனும் பிரதான நோய்த் தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த சிங்கப்பூர் தயாராகி வரும் வேளையில் இந்த முடிவுகள் வந்துள்ளன.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு, மார்பகம், கர்ப்பப்பை, பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய்கள் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் முழுமையாக நிதி வழங்கப்படும்.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள கவலைக்குரிய மற்றோர் அம்சம், வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் பரிந்துரைக்கப்பட்ட மிதமான முதல் தீவிர உடல் செயல்பாட்டை குறைவானர்களே மேற்கொண்டுள்ளனர்.

இந்த விகிதம், கிட்டத்தட்ட 80 விழுக்காட்டிலிருந்து 2021ல் 71 விழுக்காட்டாகக் குறைந்தது. குறிப்பாக, 2021ல் தொடர்ச்சியான உடற்பயிற்சி 60 முதல் 74 வயது வரையுள்ளவர்களிடையே மிகக் குறைவாகவும் (24 விழுக்காடு), 18 முதல் 29 வயது வரையுள்ள இளம் வயதினரிடையே மிக அதிகமாகவும் (40.5 விழுக்காடு) இருந்தது.

மனநலத்தைப் பொறுத்தவரை, மனவுளைச்சலைச் சமாளிக்க சுகாதார நிபுணர்களிடமிருந்து உதவி நாட அதிகமானோர் தயாராக இருக்கிறார்கள். (2021ல் 58.3%, 2019ல் 47.8%).

இதில் 60 முதல் 74 வயது வரையுள்ளோர் குறைந்த விருப்பமுள்ளவர்களாகவும் 30 முதல் 39 வயது வரையுள்ளோர் மிகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருந்தனர்.

கொள்ளைநோய் பரவலின்போது மூத்த குடிமக்கள் கொவிட்-19 தடுப்பூசியுடன் சளிக்காய்ச்சல், நுரையீரல் நோய்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அதிக சிங்கப்பூரர்கள் தொற்றுநோய்க்கு பிறகு மனநல நிபுணர்களிடமிருந்து உதவி பெற விரும்புகிறார்கள்.

கணக்கெடுப்பின்படி, புகைபிடித்தல் பரவலாவது 2019ன் 10.6 விழுக்காட்டுடன் ஒப்பிட 2021ல் 10.4 விழுக்காட்டில் நிலையாக இருந்தது. இளம் வயதிலேயே புகைபிடிக்கத் தொடங்குவதைத் தடுக்க பள்ளிகளில் கல்வி முயற்சிகளை மேம்படுத்தும், அதே நேரத்தில் புகைபிடிப்பவர்களை நிறுத்த திட்டங்கள் மூலம் நிறுத்த தொடர்ந்து உதவும் என்று அமைச்சு.

தொடர்ந்து குடிக்கும் பழக்கமும் 2019ன் 10.2 விழுக்காட்டுடன் ஒப்பிட 2021ல் 9.6 ஆக கிட்டத்தட்ட அதே அளவில் இருந்தது.