எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் டாக்சி பிரிவான ஸ்டிரைட்சும் பிரிமியர் டாக்சிஸ் நிறுவனமும் இணைந்து புதிய ஸ்டிரைட்ஸ் பிரிமியர் எனும் கூட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளன. இது சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய டாக்சி நிறுவனமாக அமையும். இதுகுறித்த அறிவிப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 13) வெளியானது.
நூறாண்டுப் பழமையான சைக்கிள் அண்ட் கேரேஜ் நிறுவன உரிமையாளரின் பிரிமியர் டாக்சிஸ் நிறுவனம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘கேர்ரோஸ் புரோஜெக்ட் மேனேஜ்மண்ட்’ எனும் வாகன வர்த்தகக் குழுமத்திடம் கைமாறியது.
இவ்வாண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, ஸ்டிரைட்ஸ் நிறுவனத்திடம் மொத்தம் 1,537 டாக்சிகளும் பிரிமியர் நிறுவனத்திடம் 965 டாக்சிகளும் உள்ளன. ஆக, புதிய நிறுவனத்தின்கீழ் ஏறத்தாழ 2,500 டாக்சிகள் சேவை வழங்கும்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனம் கம்ஃபர்ட் டெல்குரோ. அதன் வசம் 8,741 டாக்சிகள் உள்ளன. 2,171 டாக்சிகளுடன் டிரான்ஸ்கேப் மூன்றாவது நிலையில் உள்ளது.
ஸ்டிரைட்ஸ் பிரிமியர் கூட்டு நிறுவனத்தில் எஸ்எம்ஆர்டியின் ஸ்டிரைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெரும்பான்மையான பங்குகளை வகிக்கும்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் தனியார் வாடகை கார் சேவை தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரின் டாக்சி நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன. தற்போது நாட்டில் 14,000க்கு குறைவான டாக்சிகளே சேவை வழங்குகின்றன. 2012ல் இருந்த எண்ணிக்கையில் அது 50 விழுக்காட்டிற்கும் குறைவு.
இரு நிறுவனங்களின் இணைப்பால் தற்போதைய ஓட்டுநர்களின் வாடகை ஒப்பந்தங்களில் மாற்றம் ஏதும் இருக்காது என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
இத்தகைய நிறுவன இணைப்பு, போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் செயலாக்கச் செலவுகளையும் வாடகைத் தொகையையும் குறைக்கவும் உதவும் என்று தேசிய டாக்சி சங்கம், தேசிய வாடகை கார் சங்கம் ஆகியவற்றின் ஆலோசகர் திரு ஆங் ஹின் கீ கூறினார்.