நவீன சிங்கப்பூரை தோற்றுவித்த அமரர் லீ குவான் இயூ செய்ததெல்லாம் தனக்காக அல்ல. அவையெல்லாம் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் என்றார் துணைப்பிரதமர் டியோ சீ ஹியன். 'அப் குளோஸ் வித் லீ குவான் இயூ' எனும் தலைப்பு கொண்ட நூலை நேற்று தேசிய கலைக் கூடத்தின் நகர மண்டப கூடத்தில் திரு டியோ வெளியிட்டார். இதே இடத்தில்தான் 1959ல் சிங்கப்பூரின் முதல் பிரதமராக திரு லீ பதவியேற்றார். திரு லீ கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தனது 91வது வயதில் காலமானார்.
இந்த நூலிலுள்ள 37 கட்டுரைகளை திரு லீயின் தலைமை அந்தரங்கச் செயலாளர்களாகப் பணியாற்றியோர், பொதுச் சேவை, தனியார் சேவை, சமூகப் பிரமுகர்கள் ஆகியோர் எழுதியுள்ளனர். நூலின் முன்னுரையை 1997 முதல் 2000 வரை திரு லீயின் தலைமை அந்தரங்கச் செயலாளராக இருந்த தற்போதைய நிதி அமைச்சரான ஹெங் சுவீ கியட் எழுதியுள்ளார். முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன், முன்னாள் தலைமை நீதிபதி யோங் பாங் ஹாவ் ஆகியோரின் கருத்துகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
துணைப் பிரதமர் டியோ சீ ஹியனும் (இடமிருந்து 3வது) நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டும் (வலமிருந்து 3வது) நூலை வெளியிட்டனர். படம்: சாவ் பாவ்

