பல சமயத்தினரையும் ஈர்த்த விசாக தின கொண்டாட்டம்

பல சமயத்தினரையும் ஈர்த்த விசாக தின கொண்டாட்டம்

2 mins read
8704dca4-fbfe-4f8e-a805-0c9302d9bdd5
-
multi-img1 of 3

சுதாஸகி ராமன்

தமது உடல்நிலை தளர்ந்திருந்த போதிலும் புத்தரின் ஆசிகளைப் பெற ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சாக்கிய முனி பௌத்த காயா ஆலயத்துக்கு நேற்று வந்திருந்தார் 76 வயது திருவாட்டி சாரதாம்பாள் நாராயணசாமி. தமது சிறு வயதில் ரேஸ் கோர்ஸ் சாலையில் வசித்து வந்த அவர் தமது பெற்றோருடன் ஆண்டு தோறும் அந்த ஆலயத்திற்கு வரும் பழக்கத்தை இன்றும் தொடர்வதில் ஒரு வகை மன நிறைவு கிடைக்கிறது என்றார். விசாக தினமான நேற்றும் அதே உற்சாகத்துடன் அவர் காணப்பட்டார்.

"ரேஸ் கோர்ஸ் சாலையிலிருந்து இடமாறிய போதிலும் நான் இந்த கோயிலுக்கு வருகிறேன். முன்பு எளிமையாகக் காணப்பட்ட இந்த ஆலயம், இப்போது நன்கு அலங்கரிக்கப்பட்டு பல இந்தியர் களையும் ஈர்த்து வருகிறது," என்றார் அவர். கடந்த 1927ல் நிறுவப்பட்டு சிங்கப்பூரர்களால் 'ஆயிரம் விளக்குகளுடைய ஆலயம்' என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், நூற்றுக்கணக்கானோர் புத்தரை வழிப்பட்டு அமைதியான முறையில் நேற்று விசாக தினத்தைக் கொண்டாடினார்கள்.

புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற நாள், இறப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் நாளாகக் கருதப்படும் விசாக தினத்தில், பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த ஆலயத்துக்கு வந்து புத்தரை வணங்குவதில்லை. குடும்பத்தாருடன் பௌத்த காயா ஆலயத்துக்கு வந்தவர்களில் அந்தோணி சாமிபிள்ளையும் அவருடைய குடும்பமும் அடங்குவர். மனநிறைவுடன் புத்தரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள ஆண்டுதோறும் இந்த ஆலயத்துக்கு வருவதாக அவர் கூறினார்.

அமர்ந்த கோலத்தில் பெரிய உருவில் இருக்கும் இந்த ஆலயத்தின் புத்தர் சிலையை வணங்கி விசாகத் தினத்தைச் செலவிடும் பக்தர்களிடையே வெளிநாட்டு ஊழியர் அழகுசுப்பிரமணி, 42, ஆலய சிலைகள், விளக்குகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்தி தொண்டூழியப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பௌத்த ஆலயத்துக்கு நேற்று நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர் (வலது). படங்கள்: திமத்தி டேவிட்