இந்தியாவின் கோவா மாநிலம், வாஸ்கோடகாமாவில் இருந்து பீகார் தலைநகர் பாட்னா நோக்கிச் சென்ற விரைவு ரயில், உத்தரப் பிரதேச மாநிலம், மாணிக்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர். வாஸ்கோடகாமா = பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரி வித்தார். உயிரிழந்தோரில் ஆறு வயது சிறுவனும் அவனுடைய தந்தையும் அடங்குவர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
காயமடைந்த பயணிகள் மாணிக்பூர், சித்ரகூடம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தலா 500,000 ரூபாயும் படுகாயமடைந்தவர் களுக்குத் தலா 100,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். மீட்பு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்ட அமைச்சர், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அது குறித்து உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் விசாரிக்கவுள்ளனர். படம்: ஆல் இந்தியா ரேடியோ ஃபேஸ்புக்

