துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் இம்மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரை ஓமான் நாட்டிற்கு மேற்கொண்டிருந்த பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் சையது பஃஹ்து முகம்மது அல் சையதைச் சந்தித்தார். இரு தலைவர்களும் சிங்கப்பூருக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட மனமுவந்த, நீண்டகால நல்லுறவை மறுஉறுதிப்படுத்தினர் என்று பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
துணைப் பிரதமரின் ஓமான் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு தொடர்பிலான இரண்டு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின. ஓமான் தொழிலரங்கம் என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் அலி காசிம் அல் லாவாடி அளித்த விருந்தில் கலந்துகொண்ட திரு டியோ, அவரோடும் இதர மூத்த தொழில்துறை தலைவர்களோடும் பேச்சு நடத்தினார். இரு தரப்புகளும் கல்வி, தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் தொழில் உறவுகளை வலுப் படுத்த இணங்கின. ஓமானில் சிங்கப்பூரர்களையும் துணைப் பிரதமர் சந்தித்து கலந்துறவாடினார்.

