முன்னாள் சந்தைக்குப் பதில் புதிய இரண்டுமாடி வளாகம்

முன்னாள் சந்தைக்குப் பதில் புதிய இரண்டுமாடி வளாகம்

1 mins read
27bde56e-7a1b-4c00-9bde-051e87a1be01
-

ஜூரோங் வெஸ்ட் சந்தை, தீயில் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு அங்கு புதிய சந்தை வளாகம் நேற்று அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டது. புதிய இரண்டுமாடி சந்தை கட்டடம் $6.2 மில்லியன் செலவில் உருவாகி இருக்கிறது. அதில் உணவகங்களும் சமூக வளாகமும் அமைந்துள்ளன. 'ஜூரோங் சென்ட்ரல் பிளாசா' என்று குறிப் பிடப்படும் அந்தப் புதிய வளாகம், பழைய சந்தை அமைந்திருந்த ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41 இடத்திலேயே கட்டப்பட்டுள்ளது. புதிய வளாகத்தின் பரப்பு 547 சதுரமீட்டர். அதில் 35 அங்காடிக் கடைகள் இருக்கின்றன. 437 சதுர மீட்டர் பரப்பிற்கு காப்பிக்கடை கீழ்த்தளத்தில் உள்ளது.

அந்தக் காப்பிக்கடையில் 13 அங்காடிக் கடைகள் உள்ளன. மேல் மாடியில் மூத்தோர் உடற் பயிற்சி நிலையம், குழந்தைப் பராமரிப்பு நிலையம், பலநோக்கு திறந்த இடம் உள்ளிட்ட பலவும் அமைக் கப்பட்டு இருக்கின்றன. ஜூரோங் வெஸ்ட் சந்தை 493 புளோக்கில் அமைந்திருந்தது. 2016 அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அங்கு தீ மூண்டது. கீழ்த்தளத்திலிருந்த ஈரச் சந்தை ஒன்றும் காப்பிக்கடை ஒன்றும் அழிந்தன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நீலநிற உடை), ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் (வலமிருந்து 2வது) ஆகியோருடன் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் புதிய சந்தை வளாகத்தைப் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்