சிங்கப்பூரில் அனைத்துலக இந்திய விற்பனை விழா

சிங்கப்பூரில் அனைத்துலக இந்திய விற்பனை விழா

2 mins read
cd2d16e0-bc2c-4a1a-a3be-b63a36b3f974
சீன சிங்க நடனத்துடன் விற்பனை விழாவின் தொடக்க நிகழ்ச்சி களைகட்டியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சீன சிங்க நடனத்துடன் சன்டெக் சிட்டி சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்­தில் ஒன்பதாம் ஆண்டாக அனைத்துலக இந்திய விற்பனை விழா நேற்று தொடங்­கியது. கண்காட்சிக் கூடம் 403, 404 இரண்டிலும் விற்பனை விழா நேற்று தொடங்கிய உடனேயே மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விற்பனை விழாவை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்­தின்கீழ் வரும் தமிழ் முரசு, தப்லா ஆகிய செய்தித்தாட்களும் 'டி ஐடியாஸ்' நிறு­வனமும் ஏற்று நடத்துகின்றன. இந்த விழாவை அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கியதற்கு அடையாள மாக, எஸ்பிஎச் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவெத் அஷ்ரஃப், தமிழ் முரசு, தப்லா செய்தித்தாட்களின் ஆசிரியர் திரு ராஜேந்திரன், டி ஐடியாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்ணிமா காமத் ஆகியோருடன் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் அதிகாரி­களும் விழா மையத்தில் குத்து­விளக்கு ஏற்றி வைத்தனர். விழாவுக்கு வருகை புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர் களுக்கு மத்தியில் உரையாற்றிய சிங்கப்­பூருக்கான இந்தியத் தூதர் ஜாவெத் அஷ்ரஃப், இந்த விழா ஆழமாகப் பதிந்து உள்ள இந்திய அடையாளத்தைக் கொண்டிருப்பதுடன் இந்திய நாட்டின் கலை, கலாசார, பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதாகக் கூறினார். மேலும், இந்தியக் குடியரசின் 70ஆம் ஆண்டு நிறைவையும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையும் இந்தியா, நாளை கொண்டாடும் நிலையில் இது தனிச்சிறப்பு வாய்ந்த ஆண்டாக விளங்கு கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் இந்தித் திரையுலகின் பிரபலமான புதிய நட்சத்திரமும் நடிகர் சையஃப் அலி கானின் மகளுமான சாரா அலி கான் விழாவுக்கு இன்று மாலை 5.30 மணியிலிருந்து வருவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த விழாவுக்கு இணையம் மூலம் பதிவு செய்து தேர்வு செய்யப்படும் ஐந்து அதிர்ஷ்டசாலிகள் இவருடன் கலந்துரை­யாடும் வாய்ப்பையும் பெறுவர்.