கிறைஸ்ட்சர்ச் - நியூசிலாந்தின் துப்பாகிச்சூடு சம்பவத்தில் இதுவரை 49 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 41 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் உட்பட 48 பேர் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் தென் தீவிலுள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் உட்பட பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய போலிசார் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கிரைஸ்ட்சர்ச்சின் மத்திய வட்டாரத்தில் திரண்டனர். இச்சம்பவத்தில் பலரும் சுடப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இதுவரை குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 பேர் கடுமையான காயங்களுக்கு உட்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகள் உட்பட 48 பேர் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்துப் பள்ளிவாசல்களையும் மூடிவைக்கும்படி கிறைஸ்ட்சர்ச் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டின் தொடர்பில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமான குற்றவாளி என கருதப்படும் ஒருவன் பள்ளிவாசல் ஒன்றில் புகுந்து அங்குள்ள அனைவரையும் சரமாரியாகத் துப்பாக்கியால் சுடுவதை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பியிருந்தான். தனது தலையில் அணிந்திருந்த கேமரா மூலம் கிட்டத்தட்ட 17 நிமிடம் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் ஆண், பெண், சிறுவர் என்ற பேதமில்லாமல் கண்ணுக்குத் தெரிந்த அனைவரையும் சுட்டுத்தள்ளுவது தெரிகிறது. 28 வயதுடைய அனது பெயர் பிரெண்டன் டெரண்ட் என்றும் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது.
20 வயதுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங்கில ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் நாளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுவார் என்றும் நியூசிலாந்து போலிசார் தெரிவித்தனர்.
கிறைஸ்ட்சர்ச் நாடாளுமன்ற உறுப்பினரான ஏமி ஆடம்ஸ், "கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். இத்தகைய வெறுப்பை ஒருபோதும் நியாயப்டுத்தவே முடியாது" என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.
சுமார் 388,000 மக்கள் வாழும் கிரைஸ்ட்சர்ச் நகரே நியூசிலாந்தின் தென் தீவிலுள்ள ஆகப்பெரிய நகரம்.
நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்குச் சற்று அதிகமானோரே முஸ்லிம்கள் என 2013ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது.