கழிவுநீர்க்குழாய்க் கட்டமைப்புக்கான நிலத்தடி கட்டுமானப் பணிகள் தொடக்கம்

கழிவுநீர்க்குழாய்க் கட்டமைப்புக்கான நிலத்தடி கட்டுமானப் பணிகள் தொடக்கம்

2 mins read
262dfe1e-a9bc-4a0f-84d4-b96d81289025
-

நெடுந்தூரம் நீளும் கழிவுநீர்க்குழாய்க் கட்டமைப்புக்கான நிலத்தடி கட்டுமானப் பணிகள் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் தொடங்கியுள்ளன. இந்தக் கட்டமைப்பு 2025ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, மொத்தம் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆழமான சுரங்கங்களும் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு இணைப்புக் குழாய்களும் அமைக்கப்படும்.

டௌன்டவுன், ஜூரோங் லேக் வட்டாரங்களில் புதிதாகக் கட்டப்பட்ட சில இடங்கள், தெங்கா டவுன், கிரேட்டர் சவுதர்ன் வாட்டர்ஃபிரன்ட் உள்ளிட்ட இடங்களில் இந்தக் குழாய்கள் பொருத்தப்படும். இந்தக் குழய்கள், கழிவுநீரை நீர் மறுபயனீட்டு ஆலைகளில் சேர்க்கும். கழிவுநீர் பின்னர் சுத்திகரிக்கப்பட்டு 'நியூவாட்டர்' எனப்படும் மறுபயனீடு செய்யப்பட்ட நீராக மாற்றப்படும்.

ஜாலான் பாஹாரில் இதற்கான கட்டுமானப் பணிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 4ஆம் தேதி) அதிகாரபூர்வமாகத் தொடங்கின. அப்போது சுரங்கங்களைத் தோண்டுவதற்கான இயந்திரம் ஒன்று முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 3.5 மீட்டர் விட்டத்தைக் கொண்ட சுரங்கத்தை அந்த இயந்திரம் தோண்டும்.

ஆழமான கழிவுக்குழாய்த் திட்டத்தின் இரண்டாது கட்டமாக இந்தக் குழாய்கள் கட்டப்படுகின்றன. இதன் மூலம் சிங்கப்பூர் தண்ணீர் கட்டமைப்பின் நிலைத்தன்மையை அதிகரிக்க பொதுப் பயனீட்டுக் கழகம் நோக்கம் கொண்டுள்ளது. இரண்டாவது திட்டத்திற்கான செலவு 6.5 பில்லியன் வெள்ளி.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். "சிங்கப்பூரின் ஆக முக்கியமான தண்ணீர் கட்டமைப்புத் திட்டங்களில் இது மற்றொரு மைல் கல். நம் மக்கள் தொகையின் நீண்டகாலத் தண்ணீர் தேவைகளை நிறைவு செய்யும் இந்த முதலீடு தேவையானதாகவும் முக்கியமானதாகவும் உள்ளது," என்று திரு மசகோஸ் கூறினார்.