சுற்றுப்பயணத்துறையை வேரறுக்க நினைக்கும் பயங்கரவாதிகள்

சுற்றுப்பயணத்துறையை வேரறுக்க நினைக்கும் பயங்கரவாதிகள்

2 mins read
d3fe5b7c-29d6-413f-a6ff-c4383a3e7dc8
-

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் பூசலின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் காலம் முதற்கொண்டு இதுவரையில் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தேயிலை மற்றும் சுற்றுப்பயணத் துறைகளின்மீது கிளர்ச்சியாளர்கள் கை வைத்ததில்லை.

இலங்கை ஏற்றுமதி செய்யும் தேயிலையில் நச்சுப்பொருளைச் சேர்த்து அந்தத் துறையை நிர்மூலமாக்கும் சாமர்த்தியமும் செயல்திறனும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் தலையங்கக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் அடிக்கடி செல்லும் ஹோட்டல்களிலும் சுற்றுலாத்தளங்களிலும் அவர்கள் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்கிறது அந்தக் கட்டுரை. இறுதியில், இலங்கையின் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் புரட்சியைக் கொடூரமான முறையில் ஒடுக்கினார். இலங்கை இனியாவது அமைதிப்பாதையில் செல்லும் என நம்பப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தாக்குதலோ அந்தக் கனவை கானல் நீராக்கியது.

ஒரு காலத்தில் இலங்கை தெற்காசியாவின் சிங்கப்பூராகத் திகழும் என்று பலர் நினைத்திருந்தனர்...

இப்போது யாரும் அப்படி நினைப்பதில்லை...

பூசல்களும் பிரிவுகளும் நிரம்பிய இலங்கை அரசியல் தொடக்கத்திலேயே இந்தக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இலங்கையின் முக்கியமான துறைகளின் மீது திரு ராஜபக்சவின் குடும்பம் வரம்பு மீறி ஆதிக்கம் செலுத்தியதை வெறுத்த அவரது சொந்தக் கட்சியினரே அவரை வெளியேற்றி தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை அமைத்தனர். ஆரம்பத்தில் ஆட்டங்கண்ட அந்தக் கூட்டணியால் முடிவுகளைத் துரிதமாக எடுக்க முடியவில்லை. பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்தது. வர்த்தகப் பற்றாக்குறையும் பெருகியது.

ஆயினும், இலங்கையின் சுற்றுப்பயணத்துறை பாதிப்படையாமல் தொடர்ந்து வளர்ந்தது. இலங்கைக்குக் கடந்தாண்டு 2.3 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை அளித்திருந்தனர். உள்நாட்டுப் போரின் கடைசி ஆண்டான 2008இல் இருந்ததைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம்.

இலங்கையின் சுற்றுப்பயணத்துறையைக் குலைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...

ஞாயிற்றுக்கிழமையன்று நேர்ந்த எட்டு வெடிப்புச்சம்பவங்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையின் முக்கிய பல சர்ச்சைகளில் சம்பந்தப்படாமல் விலகி நிற்கும் கிறிஸ்துவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பதைச் சரியாக ஊகிக்க முடியாமல் திணறுகின்றனர் கவனிப்பாளர்கள்.