ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் வியாழக்கிழமை நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளனர். இது இவர்களின் முதல் சந்திப்பு. ரஷ்யாவின் தூரக் கிழக்கிலுள்ள விளாடிவொஸ்டோக் துறைமுக நகரில் அவர்கள் இருவரும் சந்தித்து கைக்குலுக்கினர்.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உச்சநிலை சந்திப்பு இரண்டு முறை நடந்தும் இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தப் புதிய சந்திப்பு நிகழ்கிறது. அனைத்துலக வர்த்தகத் தடைகளால் நிலைகுலைந்த வடகொரியா, ரஷ்யாவின் உதவிக்கரத்தை எதிர்பார்ப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவாலும் மேற்கத்திய நாடுகளாலும் ஒதுக்கப்பட்ட ரஷ்யா, தனக்கு அரசதந்திரச் செல்வாக்கு இன்னும் இருப்பதை இந்தச் சந்திப்பின் மூலம் காட்ட முற்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் வடகொரியா தனது அணுவாயுதங்களைக் களைய உறுதியான கடப்பாட்டைத் தெரிவிக்கும் வரை ரஷ்யா வர்த்தகத் தடைகளைத் தொடர்ந்து செயல்படுத்த கடப்பாடு தெரிவித்திருந்தது. எனவே, இரு தலைவர்களும் தங்கள் நட்புணர்வைத் தெரிவிக்கும் வாய்ப்பாகத்தான் இந்தச் சந்திப்பு இருக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.

