43 ஆண்டுகளில் கண்டிராத அதிபயங்கர புயலால் 1.2 மில்லியன் மக்கள் பாதிப்பு

43 ஆண்டுகளில் கண்டிராத அதிபயங்கர புயலால் 1.2 மில்லியன் மக்கள் பாதிப்பு

2 mins read
061cd333-6657-43e8-883e-c63f9bf9892e
-

பதினொரு கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த 12 லட்சம் மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் ஃபானி புயல் ஒடிசா மாநிலம் கோபல்பூர், சந்தாபாலி பகுதியில் நேற்று கரையைக் கடந்தது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற தீவிரமான புயல் இந்தியாவில் ஏற்படவில்லை என்று கூறப் படுகிறது.

ஃபானி புயல் பாதிப்பில் சிக்கி, (நேற்று இரவு 9 மணி நிலவரப்படி) 7 பேர் உயிரிழந் துள்ளனர்.

நேற்று காலை முதலே ஒடிசாவின் பூரி, கோபல்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மணிக்கு 175கி.மீ. முதல் 200 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியது.

ஒடிசாவின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒடிசா கடலோரப் பகுதியைக் கடக்க ஃபானி புயலுக்கு சுமார் மூன்று மணி நேரம் பிடித்தது.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பே ஃபானி புயல் பற்றிய தகவல்கள் வெளியாகி எச்சரிக் கைகள் விடுக்கப்பட்டதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந் தன.

சூறைக்காற்று வீசிய பகுதி களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேத மடைந்தன. புயல் கரையைக் கடக்கும்போது வீசிய பலத்த காற்றில் பெரிய பாரந்தூக்கி எந்திரம் ஒன்று சாய்ந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது.

ஒடிசாவின் பல இடங்களில் கைபேசி சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று பிற்பகலில் புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பாதிக்கப் பட்ட மாநிலங்களுக்குத் தேவை யான உதவிகளைச் செய்து தர மத்திய அரசு தயாராக இருப்பதாக முன்பே தெரிவிக்கப்பட்டது.

ஒடிசாவில் பெருஞ்சேதத்தை ஏற்படுத்திய ஃபானி புயல் மேற்குவங்கத்தை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயலால், இன்று காலை சுமார் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மேற்கு வங்கத்தின் கங்கை சமவெளி பகுதியை அடைந்து தீவிர புயலாக அது மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை பங்ளாதே‌ஷில் நுழைந்து படிப்படியாக வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அது மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் நிவாரண நடவடிக்கையைத் தீவிரப்படுத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு புயல் பாதிப்பைச் சமாளிக்கும் பணிகளில் அவர் ஈடுபட இருப்பதாக கூறப்பட்டது.

ஒடிசாவின் கரையோர நகரங்களில் ஒன்றான கோனார்க்கில் ஃபானி புயலால் ஏற்பட்ட நிலச் சரிவு காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்தன. ஒடிசாவின் கரையோரப் பகுதிகளில் பல நகரங்களை ஃபானி சூறையாடியதில் பெருஞ்சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. படம்: இபிஏ