பெண் சாமியாரும் பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளருமான பிரக்யா சிங் தாகூர், மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை தேச பக்தர் எனப் போற்றியதை அந்தக் கட்சி கண்டித்துள்ளது.
நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கூறியதை அடுத்து மூண்ட பெரும் சர்ச்சையில் பிரக்யா சிங்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன. "நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், அப்படியே தொடர்ந்து இருப்பார்," எனக் கூறியதுடன் கமல்ஹாசனுக்குச் சரியான பதிலடி தரப்படும் என்றும் அந்தப் பெண் சாமியார் சூளுரைத்தார். இதனை அடுத்து பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிரக்யா சிங்கின் நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்பதை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எஸ் நரசிம்மராவ் தெளிவுப்படுத்தினார். எதிர்ப்புக்குரிய தமது கருத்திற்காக பிரக்யா சிங் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திரு நரசிம்மராவ் தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னையில் நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன், தாம் கைது செய்யப்பட்டால் பதற்றநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இந்துக்கள் கோபப்படுவது வேறு, இந்து மத அரசியலில் ஈடுபடுவோர் கோபப்படுவது வேறு என அவர் கூறியுள்ளார்.