அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல மரங்கள் சாய்ந்ததாகவும் இதனால் வீடுகள் பல சேதம் அடைந்துள்ளதாகவும் அண்மை தகவல்கள் கூறுகின்றன. வெள்ள நீரிலிருந்து மக்களைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருவதாக ஒக்லஹோமா மாநிலத்தின் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
கார்களின் மேற்பகுதி மட்டும் தென்படும் அளவுக்கு வெள்ள நீர் உயர்ந்திருப்பதை ஊடகங்களில் சில படங்கள் காட்டுகின்றன. மற்ற சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளைச் சூழ்ந்திருப்பதாக மேலும் சில படங்களில் தெரிய வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பகலில் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற சூறைக்காற்று இந்த நிலைமைக்குக் காரணம் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
வெள்ளம், கனத்த மழை, ஆலங்கட்டி மழை ஆகியவற்றின் காரணமாக ஒக்லஹோமாவுக்குப் பக்கத்தில் உள்ள மிஸோரி மாநிலத்தில் ஆளுநர் மைக் பார்சன் அவசர நிலையை அறிவித்தார். மிஸோரி மிகவும் ஆபத்தான புயலை எதிர்நோக்குவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படும்படி திரு பார்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.