இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிகழ்ந்த கலவரத்தில் அறுவர் மாண்டதாகவும் 200 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறை வேண்டுமென்றே தூண்டப்பட்டதாகக் கூறிய அதிகாரிகள் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். போலிசுக்குச் சொந்தமான மூன்று வாகனங்கள் உள்பட 14 வாகனங்கள் தீயில் இட்டுக் கொளுத்தப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்தலில் திரு விடோடோ வெற்றியடைந்ததை ஏற்க மறுக்கும் ஒரு பிரிவினர், முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் ஈராயிரம் பேர் பெருவாரியாகத் திரண்டு திரு விடோடோவுக்கு எதிரான வாசகங்களை முழங்கிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
திரு விடோடோவிடம் தோற்ற திரு பிரபோவோ, தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார்.