வேலையிடத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் முக்கியம் என்றும் அத்தகைய ஏற்பாடுகளை தாமதிக்காமல் முன்கூட்டியே ஊழியர்களுக்குச் செய்து தருவது நல்லது என்றும் 'ஹேஸ்' அனைத்துலக ஆட்சேர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு நிறுவனம், குறிப்பிட்ட காலத்திற்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கு மட்டுமின்றி புதிதாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கும் நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை வழங்க முற்படும் என்று ஹேஸ் கூறியுள்ளது.
இது குறித்து ஹேஸ் நிறுவனத்தின் மக்கள் மற்றும் கலாசார பிரிவின் தலைவர் சாண்ட்ரா ஹென்கே கூறுகையில், "காலங்காலமாக, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் மகப்பேற்றுக்குப் பிறகு வேலை திரும்பும் தாய்மார்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது. வழக்கமான வேலை ஏற்பாடு போல இதனைக் கருதாமல் அவர்களது உழைப்புக்கும் விசுவாசத்திற்கும் கொடுக்கப்படும் ஒருவித சலுகையாகவே கருதப்படுகின்றன. ஒரு வர்த்தகம் அனைவரையும் உள்ளடங்கும் தன்மையை எய்த, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் கொடுக்கப்படவேண்டும்,".
"துரிதமான வேலை நடைமுறைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் அதிக நாள் தங்குவர், அவர்கள் இன்னும் நன்றாக வேலையில் இணைந்திருப்பர். அத்துடன் அந்நிறுவனங்களின் திறனாளர் தெரிவு அதிகரிக்கும்," என்றும் திருவாட்டி ஹென்கே கூறினார்.
பல்வேறு வேலை தெரிவுகளின் முறையான செயல்பாட்டை உறுதி செய்ய நிறுவனங்கள் தங்களது தொடர்புத் திறனின் மீதான முதலீட்டை அதிகரிக்கவேண்டும் என்று ஹேஸ் கூறுகிறது. ஒரு சில ஊழியர்களை விலக்குவதால் நல்ல ஊழியர்களை இழப்பதோடு சிந்தனைகளின் பன்முகத்தன்மையையும் அந்நிறுவனங்கள் குறைத்துவிடுவதாக ஹேஸ் கூறியது.
பல்வேறு வகையான ஊழியர்களுக்கு இடமளிக்கும் வேலையிடங்களில் ஊழியர் விசுவாசம், நம்பிக்கை, தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணியாற்றும் காலம் ஆகியவை அதிகரிக்கும். இதனால் அந்நிறுவனம் கூடுதல் வலுப்பெற்று ஆக்ககரமாக இருக்கும் என்றது ஹேஸ்.

